ஷா ஆலம், செப். 4 - ஒன்பதாவது கிழக்குப் பொருளாதார ஆய்வரங்கில் (இ.இ.எஃப்.) பங்கேற்பதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகருக்குப் பணி நிமித்தப் பயணம் மேற்கொண்டுள்ளார்
விளாடிவோஸ்டோக் நகர் வந்தவுடன் இந்த பணி நிமித்தப் பயணத்திற்கான நிகழ்ச்சி நிரல் குறித்து விவாதிப்பதற்காக நடத்தப்பட்ட ஒரு சிறப்பு 'முன் கவுன்சில்' கூட்டத்திற்கு அன்வார் தலைமை தாங்கினார்.
ரஷ்யப் பயணம் தொடர்பான விளக்கங்கள், அறிக்கைகள், சிலாங்கூர் மற்றும் அதன் நேரடி ரஷ்ய முதலீட்டுடன் தொடர்புடைய விபரங்கள் இந்த விளக்கமளிப்பில் வழங்கப்பட்டது என்று அமிருடின் தனது சமூக ஊடகப் பதிவில் கூறினார்.
அடுத்த ஒன்றரை நாள் அட்டவணையில் ரஷ்யாவில் உள்ள பல்வேறு தரப்புகள் மற்றும் தொழில்துறையினருடனான சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்களோடு அன்வார் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இடையிலான சிறப்பு சந்திப்பும் இடம் பெற்றுள்ளது.
எங்கள் எல்லா நிகழ்வுகளும் சுமூகமாக நடக்க இறைவனைப் பிரார்த்தனை செய்வோம் என்று அமிருடின் குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பில் இருதரப்பு உறவுகள் தவிர்த்து , ரஷ்யா தற்போது தலைவர் பதவியை வகித்து வரும் பிரிக்ஸ் எனப்படும் அரசுகளுக்கிடையிலான அமைப்பில் சேரும் மலேசியாவின் ஆர்வத்தையும் அன்வார் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டில் ரஷ்யா ஐரோப்பிய நாடுகளில் மலேசியாவின் 8வது பெரிய வர்த்தகப் பங்காளியாக இருந்தது. மொத்த இருதரப்பு வர்த்தகம் ஆண்டுக்கு ஆண்டு 15.6 சதவீதம் அதிகரித்து கடந்தாண்டு 1,422 கோடி வெள்ளியாகப் பதிவாகியுள்ளது.


