புத்ராஜெயா, செப். 4- அண்மையில் பினாங்கில் கைது செய்யப்பட்ட
மூன்று மூத்த மருத்துவர்களுக்கு எதிரான விசாரணையில் முழு
ஒத்துழைப்பு வழங்க தாங்கள் தயாராக உள்ளதாக சுகாதார அமைச்சு
கூறியுள்ளது.
சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனத்தின் நிரந்தர முடத்தன்மை
இழப்பீடு தொடர்பில் போலி கோரிக்கைகளை முன்வைக்கும் கும்பலுடன்
தொடர்பில் இருந்த சந்தேகத்தின் பேரில் அந்த மூன்று மருத்துவர்களும்
கைது செய்யப்பட்டதை தாங்கள் கவனத்தில் கொண்டுள்ளதாக அது
தெரிவித்தது.
அந்த மூன்று மருத்துவர்கள் கைது தொடர்பில் எம்.ஏ.சி.சி. மேற்கொள்ளும்
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்க சுகாதார அமைச்சு எப்போதும்
தயாராக உள்ளது.
மேலும், தங்கள் பணியாளர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரத் துஷ்பிரயோக
நடவடிக்கைகளில் அமைச்சு ஒருபோதும் விட்டுக் கொடுக்கும் போக்கை
கடைபிடிக்காது என்பதோடு பொது சுகாதாரச் சேவை எப்போதும் உயர்
தரத்தில் இருப்பதை உறுதி செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை அது
எடுக்கும் என அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
சொக்சோ முடத்தன்மை இழப்பீடு தொடர்பில் போலி கோரிக்கைகளை
முன்வைத்தது தொடர்பான விசாரணைக்காக இரு அரசாங்க
மருத்துவமனை மருத்துவர்கள், ஒரு தனியார் மருத்துவமனை மருத்துவர்
உள்பட 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு
ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி நேற்று
கூறியிருந்தார்.


