ஷா ஆலம், செப். 4 - சிலாங்கூர் மாநில அரசு வெனிலா அவரையை
பரீட்சார்த்த முறையில் உலு சிலாங்கூர மாவட்டத்தின் களும்பாங்கில்
மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் நடவு செய்யவுள்ளது.
உணவு சார்ந்த துறைகளில் பயன்படுத்தக்கூடிய இந்த பயிர் மூன்று
ஆண்டுகளில் பலன் தரத் தொடங்கும் என்று விவசாயத் துறைக்கான
ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.
இந்த முன்னோடித் திட்டத்தை நாம் விரைவில் தொடங்கவிருக்கிறோம்.
வெனிலா வர்த்தக ரீதியாக உயரிய மதிப்பைக் கொண்டுள்ளது. இதன்
மூலம் மாநிலத்திற்கு பொருளாதார ரீதியில் வருமானத்தை ஈட்ட முடியும்
என்று அவர் சொன்னார்.
தொடக்கக் கட்டமாக மூன்று ஏக்கரில் மட்டும் இந்த வெனிலா
அவரையைப் பயிரிடவுள்ளோம். இதன் உற்பத்தியைப் பொறுத்து
இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று சிலாங்கூர் கினியிடம் அவர்
தெரிவித்தார்.
கிலோ 3,000 வெள்ளி வரை விலை போகக் கூடிய வெனிலா அவரையைப்
பயிரிட மாநில அரசு எண்ணம் கொண்டுள்ளதாக இஷாம் கடந்த பிப்ரவரி
மாதம் கூறியிருந்தார்.
சிலாங்கூர் வேளாண் உருமாற்றக் கொள்கையின் கீழ் உயர் மதிப்பு
கொண்ட விவசாயத் திட்டம் மற்றும் வெளி உற்பத்தியாளர்களுடன்
இணைந்து இந்த பயிரீட்டுத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று அவர்
குறிப்பிட்டிருந்தார்.


