நியுயார்க், செப். 4 - போலியோ தடுப்பூசி இயக்கம் தொடங்கிய முதல் இரு
தினங்களில் காஸாவிலுள்ள 10 வயதுக்கும் கீழ்ப்பட்ட சுமார் 160,000
சிறார்கள் தடுப்பூசியைப் பெற்றதாக ஐக்கியா நாடுகள் சபை (ஐ.நா.)
கூறியது.
தடுப்பூசித் திட்டத்தை தங்கு தடையின்றி மேற்கொள்வதற்கு ஏதுவாக
தற்காலிகப் போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும் காஸாவின்
பல பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்ந்து நிகழ்ந்த
வண்ணம் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான
விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் கூறியது.
இஸ்ரேல் குண்டு வீச்சுத் தாக்குதல், தரை வழி நடவடிக்கை மற்றும் கடும்
சண்டை காரணமாகப் பெரும் எண்ணிக்கையிலானோர் உயிரிழந்துள்ளதோடு
கட்டாய இடப் பெயர்வு, குடியிருப்பு மற்றும் அடிப்படை வசதிகளுக்கு
சேதம் ஏற்பட்டுள்ளது என்று அது குறிப்பிட்டது.
சுற்றுவட்டாரங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ள காரணத்தால்
பலர் நெரிசல் மிகுந்த பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தவண்ணம் உள்ளனர்.
சுத்தமான நீர் இல்லாதது உள்ளிட்ட பிரச்சனைகளால் அங்கு நோய்ப்
பரவல் அதிகரித்துள்ளது என அந்த அமைப்பு தெரிவித்தது.
கடந்த திங்கள்கிழமை 74,000 சிறார்கள் போலியோ தடுப்பூசியைப் பெற்ற
வேளையில் அந்த தடுப்பூசியைப் பெற்ற சிறார்களின் எண்ணிக்கை இரு
தினங்களில் 160,000 ஆக உயர்ந்துள்ளது என்று ஐ.நா. பொதுச் செயலாளர்
டாக்டர் தெட்ரோஸ் அடானோம் கிப்ரியேசஸ் கூறினார்.
போலியோ காரணமாக பத்து வயது குழந்தையின் உடலின் ஒரு பகுதி
செயலிழந்ததைத் தொடர்ந்து காஸாவின் மத்திய பகுதியில் ஆறு நாள்
தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்டது.


