ஜோர்ஜ் டவுன், செப். 4 - பினாங்கு, பெய் அவென்யூவில் உள்ள பொழுது
போக்கு மையம் ஒன்றில் அந்நிய நாட்டுப் பிரஜை சம்பந்தப்பட்ட
கைகலப்பு தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு மூன்று
ஆடவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாராட் டாயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்
துறையினர் மேற்கொண்ட ஓப் சந்தாஸ் நடவடிக்கையில் 29 முதல் 30
வயது வரையிலான அந்த மூன்று ஆடவர்களும் கைது செய்யப்பட்டதாகப்
பாராட் டாயா மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் கமாருள்
ரிசால் ஜெனால் கூறினார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் அந்நிய நாட்டு ஆடவர்
ஒருவரிடமிருந்து தாங்கள் புகாரைப் பெற்றதாகக் கூறிய அவர், தாம் அந்த
பொழுது போக்கு மையத்தில் இருந்த போது அங்கு வந்த கும்பல் ஒன்று
கண்ணாடி போத்தல்களால் தன்னைத் தாக்கியதாக அவ்வாடவர் தனது
புகாரில் குறிப்பிட்டுள்ளார் என்றார்.
இத்தாக்குதலில் அவ்வாடவருக்கு தலை, கை மற்றும் காலில் காயம்
ஏற்பட்டதோடு சந்தேகப்பேர்வழிகளுடன் ஏற்பட்ட கைகலப்பின் போது
தம்மிடம் இருந்த 2,000 வெள்ளி ரொக்கம் காணாமல் போனதாக அவர்
தெரிவித்துள்ளார் என்றார் அவர்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக்
கூறிய அவர், தண்டனைச் சட்டத்தின் 148வது பிரிவின் கீழ் மூன்று
ஆடவர்கள் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.


