புத்ராஜெயா, செப். 4- ஊழல் குற்றவாளிகள் திருடிய சொத்துகளை
அடையாளம் காண்பதற்கு ஏதுவாக ஊழல் தடுப்பு ஆணையத்தின்
(எஸ்.பி.ஆர்.எம்.) விசாரணை மற்றும் உளவு அணுகுமுறைகள்
வலுப்படுத்தப்பட வேண்டும் என்று அதன் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ
அஸாம் பாக்கி கூறியுள்ளார்.
ஊழல் குற்றவாளிகளை கைது செய்து அவர்களை நீதிமன்றத்தில்
நிறுத்துவதோடு மட்டுமல்லாது அவர்களைத் திவாலாக்குவதிலும்
எஸ்.பி.ஆர்.எம். தற்போது கவனம் செலுத்தி வருகிறது என்று அவர்
சொன்னார்.
இவ்வாண்டில் மட்டும் நாம் குற்றவாளிகளிடமிருந்து 130 கோடி
வெள்ளியை பறிமுதல் செய்து அதனை அரசாங்கத்திடம் திரும்ப
ஒப்படைத்துள்ளோம். அனைத்து அரசாங்க நிறுவனங்களும் தங்கள்
ஆற்றலை ஒன்றுதிரட்டினால் குற்றவாளிகளை கைது செய்து
நீதிமன்றத்தில் நிறுத்துவதோடு மட்டுமல்லாது அவர்களின்
சொத்துகளையும் பறிமுதல் செய்ய இயலும் என்றார் அவர்.
நான் அவர்களை (ஊழல் குற்றவாளிகள்) திவாலாக்க விரும்புகிறேன்.
அப்போதுதான் அவர்களுக்கு அச்சம் உண்டாகும் என்பதோடு ஊழலில்
ஈடுபடுவதற்கு முன் பல முறை யோசிக்க வைக்கும் என்று அவர்
பெர்னாமாவுக்கு வழங்கிய நேர்காணலில் கூறினார்.
ஊழல் குற்றவாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்து அரசாங்கத்திடம்
ஒப்படைப்பதற்கு 2001ஆம் ஆண்டு சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை,
பயங்கரவாத நிதியளிப்பு மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் வாயிலாக
வருமானம் ஈட்டுதல் தடைச் சட்டம் அனுமதியளிப்பதாக அவர்
குறிப்பிட்டார்.
இந்த முயற்சியை மேற்கொள்வதில் விசாரணை அதிகாரிகளுக்குப் பரந்த
அனுபவமும் நிபுணத்துவமும் தேவைப்படுவதோடு தடயவியல்
ஆதாரங்களும் அவசியமாகிறது என்று அவர் சொன்னார்.
ஊழல் குற்றவாளிகள் தங்கள் சொத்துகளை பினாமி பெயரில்
வைத்திருந்தால் யாருக்கு என்ன தெரியும்? ஆகவே, விசாரணை மற்றும்
உளவு அணுகுமுறையை செம்மைப்படுத்துவதும் வலுப்படுத்துவதும்
அவசியமாகும் என்றார் அவர்.


