கோலாலம்பூர், செப் 3: சாலைப் போக்கு வரத்துத் துறையின் (ஜேபிஜே) சேவைத் தரத்தை மேம்படுத்தி, வாடிக்கையாளர் திருப்தி சம்பந்தப்பட்ட சிக்கல்களைச் சமாளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கார் கூறினார்.
புத்ராஜெயாவில் உள்ள ஜேபிஜே தலைமையகத்திற்கு திடீர் விஜயம் செய்த பின்னர் அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
"வேலை செயல்முறை (காத்திருப்பு நேரம்) மிகவும் நீண்டது. எனவே, காத்திருப்பு நேரத்தைக் குறைக்க பொருத்தமான முறையைக் கண்டறியுமாறு போக்குவரத்து அமைச்சகத்தின் பொதுச் செயலாளர் மற்றும் ஜேபிஜேயின் இயக்குநர் ஜெனரல் ஆகியோருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், காத்திருப்பு அறையை மேம்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு உகந்த சூழலை உருவாக்க வேண்டும் (உடைந்த நாற்காலிகளும், மின்விசிறிகள் இல்லை). இந்த வாரத்திற்குள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு புத்ராஜெயா ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்," என்றார்.
கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாநிலங்களில் அமலுக்கு வந்த கவுண்டரின் இயக்க நேரம் ஒரு மணி நேரத்திற்கு நீட்டிக்கப் பட்டதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் செயல்பாடுகள் மற்றும் சேவைகளை மதிப்பாய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டதாக ஷம்சுல் அஸ்ரி கூறினார்.
வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்க கடுமையாக உழைத்த ஜேபிஜேயின் ஊழியர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதை உறுதி செய்ய அனைத்து அரசு துறைகளையும் கேட்டுக் கொண்டார்.
- பெர்னாமா


