ஷா ஆலம், செப். 3 - புத்ராஜெயாவிலும் மாநிலத்திலும் உள்ள
தலைவர்களின் நிலையைத் தொடர்ந்து வலுப்படுத்துவதற்கு ஏதுவாக
கெஅடிலான் ராக்யாட் கட்சி உறுப்பினர்கள் எப்போதும் ஒன்றுபட்டுச்
செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
கட்சி உறுப்பினர்கள் சமநிலைப் புள்ளியைக் தேடும் அதேவேளையில்
கட்சிப் போராட்டத்தின் அடிப்படைக் கூறுகளை அடகு வைத்துவிடக்
கூடாது என்று கட்சியின் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
கேட்டுக் கொண்டார்.
சுமார் 400 ரிபோர்மாஸி இயக்கவாகிள் முன்னிலையில் உரையாற்றிய
போது கட்சியின் வரலாற்றை நினைவுக் கூர்ந்த அவர், நாம் முன்னோக்கிச்
செல்வதற்கு வரலாற்றைப் படிப்பினையாகக் கொள்ள வேண்டும் எனக்
கேட்டுக் கொண்டார்.
புத்ரா ஜெயாவிலும் மாநிலங்களிலும் உள்ள தலைமைத்துவத்தின்
நிலையை வலுப்படுத்துவது நமது அனைவரின் பொறுப்பாகும். சமநிலைப்
புள்ளியை தாம் தேட வேண்டும். அதே சமயம் நமது போராட்டத்தை அடகு
வைத்து விடவும் கூடாது. விமர்சிக்கலாம், சினம் கொள்ளலாம். ஆனால்
பேரிடரின் பெரிய மற்றும் சிறிய அளவின் வேறுபாட்டை நாம்
அறிந்திருக்க வேண்டும் என்றார் அவர்.
நாடு தற்போது மீட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. ரிங்கிட்டின்
மதிப்பு வலுவடைந்து வருகிறது. ஆனால் அவர்கள் (பெரிக்கத்தான்
நேஷனல்) என்ன செய்கிறார்கள்? ஆகவே, அனுபவத்தின் வழி பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அவரின் சகாக்கள் அடைந்து
வரும் சாதனைகள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று அவர்
சொன்னார்.
டத்தோஸ்ரீ அன்வார் இரண்டாம் தவணையிலும் பிரதமராக இருப்பதை
உறுதி செய்ய நாம் அனைவரும் சக்தியை ஒன்று திரட்டி பாடுபட
வேண்டும் என அமிருடின் கேட்டுக் கொண்டார்.


