புத்ராஜெயா, செப். 3 - நாட்டில் இன்னும் செயல்பாட்டில் உள்ள சில தீவிரவாதத் தரப்புகளைச் சமாளிக்கும் திறன் அரச மலேசிய போலீஸ் படைக்கு (பி.டி ஆர்.எம்.) உள்ளது என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.
இத்தகைய தீவிரவாத நடவடிக்கைகள் அதிகரித்து வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டாலும் பி.டி.ஆர்.எம். அதனைத் தடுக்க முயற்சித்து வருவதாக அவர் உறுதியளித்தார்.
எந்தச் சூழ்நிலையிலும், மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், காவல்துறை அவற்றைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது என்ற உத்தரவாதத்தை நான் அளிக்கிறேன் என்று நேற்று தேசிய பாதுகாப்பு மாநாட்டின் நிறைவு விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
முன்னதாக, நிகழ்வில் உரையாற்றுகையில், இஸ்லாமிய போதனைகளை அரசாங்கம் பின்பற்றாத வரை அதனை எதிர்க்க வேண்டும் என்று நம்பும் பல கும்பல்கள் மலேசியாவில் இன்னும் இருப்பதாக சைபுடின் சொன்னார்.
களத்தில் என்ன நடக்கிறது என்பது பற்றிய தகவல்களை மாநில காவல்துறைத் தலைவர் பெரும்பாலும் ஒவ்வொரு வாரமும் எனக்கு வழங்குகிறார்.
உலு திராம் தாக்குதலை ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவமாகக் கருத வேண்டாம். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் முதல் இல்லத்தரசிகள் மற்றும் கட்டுமானத் துறை ஊழியர்கள் வரையிலான டாயேஷ் தரப்பினரின் கைது நடவடிக்கையை எளிதாக நினைக்க வேண்டாம் என்றார் அவர்.


