ஷா ஆலம், செப். 2- தமிழகத்தின் பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஒரு
மாத கால இலக்கணப் பயிற்சியை மேற்கொள்ளும் மாணவி எம்.
சிவரஞ்சனிக்கு சுங்கை ராமால் தொகுதி ஒருங்கிணைப்பாளர் மஸ்வான்
ஜோஹார் 2,000 வெள்ளி நிதியுதவி வழங்கினார்.
மலாயா பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் பட்டப்படிப்பை
மேற்கொண்டு வரும் மாணவி சிவரஞ்சனி பாரதியார் பல்கலைக்கழகத்தில் இலக்கணப் பயிற்சியை மேற்கொள்வதற்காகக் கடந்த மாத தொடக்கத்தில் தமிழகம் பயணம் மேற்கொண்டதாக சுங்கை ராமால் தொகுதி இந்திய சமூகத் தலைவர் ஏ.சிவக்குமார் கூறினார்.
கல்வித் திட்டத்திற்காக தமிழகம் செல்லும் மாணவிக்கு உண்டாகும்
செலவினத்தைக் கருத்தில் கொண்டு உதவி வழங்கும்படி தாம் விடுத்த
கோரிக்கையை ஏற்று மஸ்வான் இந்த நிதியுதவிக்கு அங்கீகாரம்
வழங்கியதாக அவர் சொன்னார்.
அதே சமயம், பாங்கி நாடாளுமன்றத் தொகுதி மற்றும் மித்ரா எனப்படும்
இந்திய சமூக உருமாற்றுப் பிரிவின் உதவியால் மாணவி சிவரஞ்சனிக்கு
மடிக்கணினி ஒன்றும் வழங்கப்பட்டது எனவும் சிவக்குமார் தெரிவித்தார்.
மாணவி சிவரஞ்சனிக்கு கல்விப் பயணத்திற்கான நிதியுதவி மற்றும்
மடிக்கணினி வழங்கி உதவிய மஸ்வான் ஜோஹார் மற்றும் பாங்கி
நாடாளுமன்ற உறுப்பினர் ஷியாரெட்ஸான் ஜோஹான் ஆகியோருக்கு
தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக சிவக்குமார் மேலும் குறிப்பிட்டார்.


