கோலாலம்பூர், செப். 2- எதிர்வரும் 2030ஆம் ஆண்டுவாக்கில் இரு தரப்பு
வர்த்தகத்தை 15 விழுக்காடு விரிவுபடுத்த நியுசிலாந்தும் மலேசியாவும்
இணக்கம் கண்டுள்ளதாக நியுசிலாந்து பிரதமர் கிறிஸ்டபெர் லுக்ஸன்
கூறினார்.எல்லையில் சீரான நடைமுறையை உறுதி செய்ய மின்-சான்றிதழ் முறை
மற்றும் புதிய சுங்க ஒத்துழைப்பை உருவாக்க இரு தரப்பும் ஒன்றிணைந்து
செயல்பட்டு வருவதாக அவர் சொன்னார்.
இரு நாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள அதே உறவை அடுத்த
தலைமுறையினரும் அனுபவிப்பதற்கு ஏதுவாக கல்வித் தொடர்புகளையும்
இளைஞர் பரிமாற்றத் திட்டங்களையும் வலுப்படுத்துவது குறித்தும்
தாங்கள் விவாதித்தாக அவர் தெரிவித்தார்.
புத்ரா ஜெயாவில் இன்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன்
இணைந்து நடத்திய கூட்டுச் செய்தியாளர் சந்திப்பின் போது அவர்
இவ்வாறு குறிப்பிட்ட்டார்.
இம்மாதம் 1 முதல் 3ஆம் தேதி வரை மலேசியாவுக்கு முதலாவது
அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டுள்ள கிறிஸ்டபெர் லக்ஸன்,
ஏற்கனவே மிகவும் அணுக்கமாக இருக்கும் மலேசிய-நியுசிலாந்து உறவை
மேலும் வலுப்படுத்த தமது இந்தப் பயணம் உதவும் எனக் கூறினார்.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் நடத்திய சந்திப்பின் போது இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறிப்பாக வர்த்தகம், முதலீடு, தற்காப்பு துறைகளில் வாய்ப்புகளை விரிவாக்குவது குறித்து அவர் விவாதித்தார்.
கடந்த 2023ஆம் ஆண்டு மலேசியாவின் 28வது பெரிய வர்த்தக
பங்காளியாகவும் 22வது ஏற்றுமதி நாடாகவும் ஓசியானா பிராந்தியத்தித்ல
27வது பெரிய இறக்குமதியாளராகவும் நியுசிலாந்து விளங்கியது.
கடந்தாண்டு ஜூன் மாத நிலவரப்படி மலேசியா நியுசிலாந்து நாட்டின்
இரண்டாவது மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக விளங்கியது. இரு
நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மதிப்பு 632 கோடி டாலரை எட்டியது.


