கோத்தா கினபாலு, ஆக. 30 - கோத்தா கினபாலு அனைத்துலக விமான நிலையச் சாலையில் இன்று அதிகாலை நிகழ்ந்த மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் இருவர் கருகி மாண்டனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த நபர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று கோத்தா கினபாலு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் ஓர்டின் கிலு கூறினார்.
இந்த விபத்து தொடர்பில் இன்று விடியற்காலை 2.30 மணியளவில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் ஐந்து நிமிடங்களில் சம்பவ இடத்தை அடைந்ததாக அவர் சொன்னார்.
இவ்விபத்தில் சிக்கிய கார் ஒன்றில் ஏற்பட்ட தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள், காரின் உள்ளே சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர். இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட மற்ற இரு வாகனங்களின் ஒட்டுநர்கள் லேசான காயங்களுடன் தப்பினர் என்றார் அவர்.
இவ்விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் மேல் நடவடிக்கைக்காகக் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாகச் சம்பவ இடத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் தெரிவித்தார்.


