உலு சிலாங்கூர், ஆக. 30 - இரசாயன மற்றும் சவப் பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு ஏதுவாக நுர் ஃபாரா கார்த்தியின் கொலை வழக்கு விசாரணையை கோல குபு பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வரும் அக்டோபர் மாதம் 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
அவ்விரு அறிக்கைகளும் இன்னும் தயாராகவில்லை என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் அஸ்மா சே வான் நீதிமன்றத்தில் தெரிவித்ததைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் நுருள் இஸ்ஸா ஹசான் இவ்வழக்கு விசாரணைக்கான புதிய தேதியை நிர்ணயித்தார்.
நுர் ஃபாரா கொலை வழக்கு தொடர்பான இரசாயன மற்றும் சவப் பரிசோதனை அறிக்கை இன்னும் தயாராகவில்லை. ஆகவே, இந்த வழக்கு விசாரணைக்கான புதிய தேதியை நிர்ணயிக்கும் படி நீதிமன்றத்தைக் கேட்டுக் கொள்கிறேன் என்று அஸ்மா நீதிமன்றத்தில் கூறினார்.
இந்த கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள லான்ஸ் கார்ப்ரல் முகமது அலிஃப் மோன்ஜானியின் வழக்கறிஞர் நுர் அய்டா முகமது ஜைனுடினும் இதனை உறுதிப்படுத்தினார்.
கடந்த ஜூலை மாதம் 10ஆம் தேதி காலை 9.00 மணிக்கும் ஜூலை 15ஆம் தேதி மாலை 6.00 மணிக்கும் இடையே, உலு பெர்ணம் எஸ்.கே.சி. கிளேடாங் செம்பனைத் தோட்டத்தில் நுர் ஃபாரா கார்த்தினியைப் படுகொலை செய்ததாக பேராக் மாநிலத்தில் பணிபுரியும் போலீஸ்காரரான முகமது அலிஃப் மீது கடந்த ஜூலை 26ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
குற்றவாளி என நிரூபிக்கப் பட்டால் கட்டாய மரண தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.


