கோலாலம்பூர், ஆகஸ்ட் 30: ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் நிலம் உள்வாங்கிய சம்பவத்தில் பாதிக்கப் பட்டவரை தேடும் நடவடிக்கை மேற்கொள்ளும் இடத்தில் நுழைய வேண்டாம் என்று காவல்துறை மீண்டும் பொதுமக்களுக்கு நினைவூட்டியது, ஏனெனில் இது தேடுதல் நடவடிக்கைக்கு இடையூறாக இருக்கும்.
மேலும், அங்கு நடந்த மற்றொரு நிலம் உள்வாங்கிய சம்பவத்தைத் தொடர்ந்து பொதுமக்கள் அப்பகுதிக்குள் நுழைவதைத் தவிர்க்க வேண்டும் என்று டாங் வாங்கி மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி சுலிசிமி அப்பாண்டி சுலைமான் கூறினார்.
"காவல்துறையினரின் அறிவுரைகளுக்குக் கீழ்ப் படியுமாறு அனைவருக்கும் அறிவுறுத்த விரும்புகிறேன், தடை செய்யப்பட்ட பகுதிகள் வழியாக தன்னிச்சையாக செல்ல வேண்டாம். எந்த ஒரு அசம்பாவிதத்தையிம் நாம் விரும்புவதில்லை," என்று அவர் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை, மஸ்ஜித் இந்தியா பகுதியில் நிகழ்ந்த மண் உள்வாங்கிய சம்பவத்தில் இந்திய பிரஜையான விஜயலட்சுமி (48) காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.
- பெர்னாமா


