குவாந்தான், ஆகஸ்ட் 29: மலேசிய தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா கமிஷன் (SKMM) அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளைப் போல் தங்களைக் காட்டிக்கொண்ட மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்ட தொண்டு சங்கத்தின் செயலாளர் RM728,480 ஐ இழந்தார்.
38 வயதான அப்பெண் போதைப்பொருள் வழக்கில் சிக்கி இருப்பதாகக் கூறி ஏமாற்றப்பட்டதாகப் பகாங் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஓத்மான் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 7 ஆம் தேதி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மலேசிய தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா கமிஷன் அதிகாரியாகக் காட்டிக்கொண்ட சந்தேக நபரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அந்தப் பெண்ணின் தொலைபேசி எண்ணில் புகார் செய்யப் பட்டுள்ளதாக அந் நபர் கூறினார்.
"சந்தேக நபர் விசாரணையின் நோக்கத்திற்காகப் பாதிக்கப்பட்டவரிடம் பணத்தை வேறு வங்கி கணக்கிற்கு மாற்றச் சொன்னார். ஆகஸ்ட் 13 முதல் 19 வரையிலான காலகட்டத்தில், பாதிக்கப்பட்டவர் 11 வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் 147 பரிவர்த்தனைகளைச் செய்தார். இதன் விளைவாக RM728,480 இழப்பு ஏற்பட்டது.
"பாதிக்கப்பட்டவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிறகு, காவல்துறையில் புகார் அளித்தார்," என்று யஹாயா ஓத்மான் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
தெரியாத நபர்களை எளிதில் நம்ப வேண்டாம் என்றும், மோசடிக்கு ஆளாகாமல் இருக்க காவல்துறை அல்லது சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களை தொடர்பு கொள்ளுமாறும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
– பெர்னாமா


