புத்ராஜெயா, ஆக. 29- ரோன்95 பெட்ரோலுக்கான மானியத்தை நீக்கும் திட்டத்திற்கு மாற்றாக விரிவான பயனீட்டு வரியை குறிப்பாகப், பொருள் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) அறிமுகப்படுத்தும் திட்டத்தை அரசாங்க கொண்டிருக்கவில்லை என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.
இதன் தொடர்பான ஆருடங்களை முற்றாக நிராகரித்த அவர், இவ்விவகாரம் குறித்து விவாதிக்கப்படவில்லை என்றார்.
``இல்லை``, இது பற்றி நாங்கள் விவாதிக்கவேயில்லை என்று வதந்திகளுக்கு
முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் நிருபர்களுக்கு அளித்த சுருக்கமான
பதிலில் அவர் சொன்னார். முன்னதாக அவர், இங்குள்ள டத்தாரான்
புத்ராஜெயாவில் 2024 தேசிய தினக் கொண்டாட்டத்திற்கான முழு ஒத்திகை
அணிவகுப்பை பார்வையிட்டார்.
அரசாங்கம் வருமானத்தை பெருக்க விரும்புதால் ரோன்95 பெட்ரோலுக்கான மானியத்தை நீக்கும் திட்டத்திற்கு மாற்றாக விரிவான பயனீட்டு வரியைக் குறிப்பாக, பொருள் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) அறிமுகப்படுத்தும் திட்டத்தை அது பரிசீலித்து வருகிறது என இணைய ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தி தொடர்பில் அவர் இவ்வாறு
கருத்துரைத்தார்.
இந்த விரிவான வரி வசூலிப்பு திட்டம் குறித்து அமைச்சரவையில்
விவாதிக்கப்பட்டதாக, இவ்விவாரத்துடன் அணுக்கமான தொடர்பைக்
கொண்டிருக்கும் வட்டாரங்களை அந்த செய்தி மேற்கோள் காட்டியிருந்தது.
மலேசியா எண்ணெய் உற்பத்தி நாடாக விளங்குவது மற்றும்
பெரும்பாலான மலேசியர்களின் அத்தியாவசியத் தேவையாகப் பெட்ரோல்
இருப்பது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ரோன்95 பெட்ரோலுக்கான
மானியத்தை அகற்றுவதைக் காட்டிலும் ஜி.எஸ்.டி. வரியை மீண்டும் அமல்படுத்துவது அரசியல் ரீதியாக எளிதான செயலாக இருக்கும் என விவாதிக்கப்பட்டது என அந்த ஊடகம் கூறியது.


