கோத்தா பாரு, ஆக. 29- நிலம் உள்வாங்கிய சம்பவத்தால் பாதிக்கப்பட்ட
ஜாலான் மஸ்ஜித் இந்தியா வட்டாரத்தை பாதுகாப்பற்ற மற்றும் பேரிடர்
மண்டலமாக அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று தேசிய
போலீஸ் படைத் தலைவர் (ஐ.ஜி.பி.) டான்ஸ்ரீ ரசாருடின் ஹூசேன்
கூறினார்.
குறிப்பிட்ட ஒரு பகுதியைப் பாதுகாப்பான அல்லது பாதுகாப்பற்றப்
பகுதியாக அறிவிப்பதாக இருந்தால் அதற்கான அனுமதியை தேசிய
பாதுகாப்பு மன்றத்திடமிருந்து காவல் துறை பெற வேண்டும் என்று அவர்
சொன்னார்.
மஸ்ஜித் இந்தியா பகுதியை பாதுகாப்பற்ற வட்டாரமாக அறிவிக்க
வேண்டிய அவசியம் தற்போதைக்கு எழவில்லை. ஏனென்றால், அங்கு
நிகழ்ந்த சம்பவம் பேரிடராக வகைப்படுத்தப்படவில்லை என்று அவர்
தெளிவுபடுத்தினார்.
பேரிடர் பகுதியாகப் பிரகடனப்படுத்தப்படாவிட்டாலும் காவல் துறை,
தீயணைப்புத் துறை, கோலாலம்பூர் மாநகர் மன்றம், பொது தற்காப்பு படை
ஆகியவை பேரிடர் நிகழ்ந்தது போன்ற உணர்வில் மிகக் கடுமையாகப்
பணியாற்றி வருகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
இங்குள்ள கிளந்தான் மாநில போலீஸ் தலைமையகத்தில் இன்று
நடைபெற்ற கிளந்தான் மாநில போலீஸ் தலைவரின் பதவியேற்பு மற்றும்
பதவி ஒப்படைப்பு நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
மஸ்ஜித் இந்தியா பகுதியில் நிகழ்ந்த மண் உள்வாங்கிய சம்பவத்தில்
இந்திய பிரஜை ஒருவர் காணாமல் போனது தொடர்பான சமீபத்திய
நிலவரங்கள் குறித்து விவரித்த போது டான்ஸ்ரீ ரசாருடின் இவ்வாறு
சொன்னார்.


