ஈப்போ, ஆக, 29 - இங்குள்ள தாமான் ஸ்ரீ ரோக்காம், ஜாலான் பாசாரில்
உள்ள ஒரு வீட்டின் சிமெண்ட் தரையில் புதைக்கப்பட்ட பெண்
குழந்தையின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த வீட்டில்
முன்பு வாடகைக்கு இருந்த இந்தோனேசிய பெண்ணை போலீசார் தேடி
வருகின்றனர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக அவ்வீட்டில் மாதம் 400 வெள்ளி வாடகைக்கு
தங்கியிருந்த இந்தோனேசிய மாது கடந்த மாதம் தலைமறைவாகி
விட்டதாக வீட்டின் உரிமையாளர் புகாரளித்துள்ளார் என்று ஈப்போ
மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் ஜைனால் அபிடின் அபாங்
அகமது கூறினார்.
வாடகைக்கு கொடுத்த வீட்டிலிருந்து ஒரு வீடு தள்ளி அதன்
உரிமையாளர் குடியியிருந்து வந்ததாகக் கூறிய அவர், மாதந்தோறும்
வாடகைப் பணத்தை பெறச் செல்லும் போது அம்மாது கர்ப்பமாக
இருப்பதை கண்டுள்ளார் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
அந்த வீட்டில் புதிதாக வாடகைக்கு வந்த இந்தோனேசிய ஆடவர் ஒருவர்
வீட்டைப் புனரமைப்பதற்காக தரையை உடைத்த போது குழந்தையின்
சடலத்தைக் கண்டு போலீசுக்கு தகவல் கொடுத்தாக அவர் மேலும்
சொன்னார்.
வீட்டின் கார் நிறுத்துமிடத்தின் தரையை உடைத்த போது கைலியின்
கிழிந்த பாகங்களும் அதில் குழந்தையின் உடலும் இருப்பதை அவ்வாடவர்
கண்டதாக அபாங் ஜைனால் குறிப்பிட்டார்.
அந்த குழந்தையின் உடலில் காயம் ஏதும் காணப்படவில்லை என்பதை
ஈப்போ, ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையின் தடயவில்
நிபுணர்களின் அறிக்கை காட்டுகிறது என்றார் அவர்.


