(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஆக. 29 - உலு சிலாங்கூர் மாவட்டத்தின் பத்தாங் காலி,
தாமான் வாவாசானில் நேற்று முன்தினம் வீசிய புயல்காற்றில் கூரை
சேதமடைந்த திருமதி கே. காமாட்சியின் வீட்டை சீரமைப்பதற்கான
நடவடிக்கையை உலு சிலாங்கூர் நகராண்மைக் கழக உறுப்பினர் பி.
ராஜேஸ் ராவ் விரைந்து மேற்கொண்டார்.
இந்த பேரிடர் குறித்த தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து சம்பவ
இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல்
கூறியதோடு வீட்டை சரி செய்வதற்கான நடவடிக்கைகளையும்
முன்னெடுத்ததாக ராஜேஸ் ராவ் கூறினார்.
வீட்டில் மழை நீர் நுழைவதைத் தடுப்பதற்கான தற்காலிக
நடவடிக்கையாகக் கூரைப் பகுதி கேன்வஸ் பையின் மூலம் மூடப்பட்ட
வேளையில் பத்தாங் காலி சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர்
சைபுடின் ஷாபி முகமது மூலம் வீட்டில் புதிய கூரைகளைப்
பொருத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று அவர்
சொன்னார்.
பாதிக்கப்பட்ட வீட்டில் கூரைகளைச் சரி செய்யும் பணி சில தினங்களில்
முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப்படுவதாகக் கூறிய அவர், பாதிக்கப்பட்ட
குடும்பத்திற்கு உதவும் முயற்சிக்குப் பெரிதும் துணை நின்ற உலு
சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய
பிரகாஷ், உலு சிலாங்கூர் நகராண்மைக் கழக உறுப்பினர்கள், இந்திய
சமூகத் தலைவர்கள், பி.கே.ஆர்., ஜசெக, மஇகா உள்ளிட்ட அரசியல் கட்சி
பொறுப்பாளர்களுக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டார்.


