பாலிக் பூலாவ், ஆக. 29 - ஏமாற்று நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதற்காக தங்கள் வங்கிக் கணக்குகளை முதலீட்டு மோசடிக் கும்பலிடம் வழங்கிய சந்தேகத்தின் பேரில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கும்பலின் மோசடியில் சிக்கிய பலர் மொத்தம் 132,152 வெள்ளியை இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பாராட் டாயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் வர்த்தக் குற்றப்புனாய்வுப் பிரிவினர் இம்மாவட்டத்தின் இருவேறு இடங்களில் கடந்த செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் மேற்கொண்ட அதிரடிச் சோதனைகளில் அவ்விருவரும் கைது செய்யப்பட்டதாகப் பாராட் டாயா மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் கமாருள் ரிசால் ஜெனால்
கூறினார்.
பேஸ்புக்கில் விளம்பரப்படுத்தப்பட்ட பங்கு முதலீட்டுத் திட்டத்திற்குத் தனது வங்கிக் கணக்கைப் பயன்படுத்த மோசடிக் கும்பலை அனுமதித்த சந்தேகத்தின் பேரில் முப்பத்து மூன்று வயதான ஆடவர் நேற்று பாயான் லெப்பாஸ் போலீஸ் நிலைய வளாகத்தில் கைது செய்யப்பட்டார் என அவர் சொன்னார்.
இந்த மோசடி தொடர்பில் பாயான் பாரு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், பாதிக்கப்பட்ட நபர் மொத்தம் 117,352 வெள்ளியை இணையப் பரிவர்த்தனை வாயிலாகப் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளார் என அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
இத்தகைய மோசடி தொடர்பில் 55 வயதுடைய மற்றொரு நபர் நேற்று முன்தினம் பாயான் லெப்பாஸ், ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷா சாலையோரம் கைது செய்யப்பட்டார் என்றார் அவர்.
பயன்படுத்தப்பட்ட மினி கூப்பர் கார் விற்பனை மோசடிக் கும்பலிடம் தனது வங்கிக் கணக்கை ஒப்படைத்த சந்தேகத்தின் பேரில் அவ்வாடவர் கைது செய்யப்பட்டார் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இவ்விரு சந்தேகப்பேர்வழிகளும் குற்றவியல் சட்டத்தின் 320வது பிரிவின் கீழ் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் சொன்னார்.


