கோலாலம்பூர், ஆக. 29 - இங்குள்ள டத்தாரான் மெர்டேக்காவில் நாளை
இரவு நடைபெறவிருந்த 2024 தேசிய தினக் கொண்டாட்ட நிகழ்வை
கோலாலம்பூர் மாநகர் மன்றம் ரத்து செய்துள்ளது.
அண்மைய காலமாக மாநகரில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களில்
பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்நிகழ்வு ரத்து
செய்யப்படுவதாக மாநகர் மன்றம் தனது பேஸ்புக் பக்கத்தில்
குறிப்பிட்டுள்ளது.
தேசிய தினத்தை முழு நாட்டுப் பற்று உணர்வுடன் அனுசரிக்கும்படி பொது
மக்களை அது கேட்டுக் கொண்டது.
இங்குள்ள ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் பூமி உள்வாங்கியதால் ஏற்பட்ட
எட்டு மீட்டர் ஆழ பள்ளத்தில் இந்திய பிரஜையான விஜயலட்சுமி (வயது
48) விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த மாதுவை
மீட்கும் பணிகள் தொடர்ந்து ஏழு நாட்களாக மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன.
விஸ்மா யாக்கினில் உள்ள கழிவு நீர் சுரங்கப் பாதை வழியாகத் தேடும்
பணியை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மேற்கொண்டு வரும்
வேளையில் இயந்திரங்களின் உதவியின்றி தோண்டுதல் நடவடிக்கைகளும்
மேற்கொள்ளப்படுகின்றன என்று மாநகர் மன்றம் கூறியது.
காணாமல் போன மாதுவை கண்டு பிடிப்பதற்காக கனிமவளம் மற்றும்
புவிஅறிவியல் துறைக்குச் சொந்தமான தரையை ஊடுருவும் ராடார்
கருவியைக் கொண்டு தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


