குவாந்தான், ஆகஸ்ட் 27 - நேற்று சனிக்கிழமை தெலோக் செம்பேடாக்கில் நடைபெற்ற ஓட்டப் போட்டியில் பங்கேற்ற ஒருவர் வெப்பப் பக்கவாதத்தால் தெங்கு அம்புவான் அப்சான் மருத்துவமனையில் (எச்டிஏஏ) உயிரிழந்தார்.
மேலும், அந்த 20 வயது இளைஞனுக்கு வெப்பப் பக்கவாதத்தால் உடல் உறுப்புகள் செயலிழந்து மரணம் ஏற்பட்டுள்ளது என விசாரணையில் தெரியவந்துள்ளதாகப் பகாங் சுகாதாரத்துறை இயக்குநர் டத்தோ டாக்டர் ருஸ்டி அப்துட் ரஹ்மான் கூறினார்.
"பாதிக்கப்பட்டவர், ஆபத்தான நிலையில் தெங்கு அம்புவான் அப்சான் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார்.
"உகந்த சிகிச்சை அளித்த போதிலும், அவரது உடல்நிலை மோசமடைந்து, ஆகஸ்ட் 25 அன்று இரவு 9.39 மணிக்குக் காலமானார் என்று ருஸ்டி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 2 ஆம் தேதி மாரானில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த குடிமைத் தற்காப்புப் படை அதிகாரி சம்பந்தப்பட்ட முதல் மரணத்தைத் தொடர்ந்து, மாநிலத்தில் வெப்ப பக்கவாதத்தால் ஏற்பட்ட இரண்டாவது மரணம் இதுவாகும் என்று அவர் கூறினார்.
இந்த ஆண்டு பகாங்கில் இன்று வரை வெப்பம் தொடர்பான 18 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில் 14 வெப்ப சோர்வு மற்றும் நான்கு வெப்ப பக்கவாதம் மற்றும் இரண்டு இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக டாக்டர் ருஸ்டி கூறினார்.
"வெப்பமான காலநிலையில் குறிப்பாக வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடும் போது அல்லது உடற்பயிற்சி செய்யும் போது ஏற்படும் சிக்கல்களைத் தவிர்ப்பதற்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்குப் பகாங் சுகாதாரத் துறை அறிவுறுத்துகிறது," என்று அவர் கூறினார்.
- பெர்னாமா


