கோலாலம்பூர், ஆகஸ்ட் 27 - நாளை முதல் ஆகஸ்ட் 31 வரை சிலாங்கூர் புத்ரா ஜெயா வான்வெளியில் மலேசிய ஆகாயப் படை விமானங்கள் தாழ்வாக பறந்து தந்திரோபாய பயிற்சிகளை மேற்கொள்ளும்
ஆகஸ்ட் 31 அன்று டத்தாரான் புத்ரா ஜெயாவில் நடைபெற உள்ள சுதந்திரக் கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்த விமானப் பயிற்சி நடைபெறுவதாக ஆர்எம்ஏஎஃப் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
பயிற்சிக் காலம் முழுவதும், ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளின் விமானங்கள், குறிப்பிட்ட பகுதிகளில், குறிப்பாக புத்ராஜெயா மற்றும் சிலாங்கூர் வானில் குறைந்த அளவிலான தந்திரோபாய விமானப் பயிற்சி மேற்கொள்ளும்.
"நிகழ்வின் வான்வழிப் பிரிவை வழி நடத்தும் பொறுப்பு ஆர்எம்ஏஎஃப்விடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. இதில் ஆர்எம்ஏஎஃப் மற்றும் ஏடிஎம் க்குச் சொந்தமான பல்வேறு வகை விமானங்கள், போர் விமானங்கள், போக்குவரத்து விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உள்ளடக்கிய வான்வழி நிகழ்ச்சிகள் நடைபெறும்" என்று அந்த அறிக்கை கூறுகிறது.
ராணுவ விமானங்கள், குறிப்பாக ஆர்எம்ஏஎஃப், ஏடிஎம் மற்றும் பிற பாதுகாப்புப் படையினர் பயிற்சிக் காலத்தில் தாழ்வாக பறப்பதை கண்டால், பொதுமக்கள் அச்சப்படவோ, கவலைப்படவோ வேண்டாம் என ஆர்எம்ஏஎஃப் அறிவுறுத்தியுள்ளது.
- பெர்னாமா


