ஜாசின், ஆக. 27- இங்குள்ள தாமான் ரிம் பாருவில் உள்ள சிகையலங்கரிப்பு
கடையின் முன்புறம் பாராங்கத்தியேந்திய முகமூடிக் கும்பல் நடத்திய
கோரத் தாக்குதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
நேற்று முன்தினம் இரவு 8.39 மணியளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தில் 24
வயது இளைஞர் பலியானதாக ஜாசின் மாவட்ட போலீஸ் தலைவர்
டிஎஸ்பி அகமது ஜாமில் ராட்ஸி கூறினார்.
தாக்குதலுக்கு இலக்கான அந்த இளைஞர் தனது 22 வயது தம்பியைத்
தொடர்பு கொண்டதைத் தொடர்ந்து அவர் தனது அண்ணனை உடனடியாக
ஜாசின் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டுச்
சென்றதாக அகமது ஜாமில் சொன்னார்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி
இரவு மணி 10.15 மணியளவில் உயிரிழந்ததாகக் கூறிய அவர்,
தாக்குதலுக்கு இலக்கான ஆடவரின் தம்பியையும் அக்கும்பல்
துரத்தியதாகவும் எனினும் அவர் தாக்குதலிலிருந்து தப்பியதாகவும்
குறிப்பிட்டார்.
தாக்குதலுக்கு உள்ளான இளைஞரை அவரின் தம்பி காரில்
மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்த சமயம், மீண்டும்
அங்கு வந்த முகமூடிக் கும்பல் பாராங்கத்தியால் காரின் கண்ணாடியை
உடைத்துள்ளது.
அக்கும்பலிடமிருந்து அந்த இளைஞர் தப்ப முயன்ற வேளையில்
மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் நிறுத்தி
வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வண்டியை கார் மோதி சேதத்தை
ஏற்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்தார்.
உடனடியாக ஜாசின் மாவட்ட போலீஸ் நிலையத்திற்கு காரைச்
செலுத்தியதன் மூலம் அக்கும்பலின் தாக்குலிலிருந்து அந்த இளைஞர்
தப்பியதாக அவர் அறிக்கை ஒன்றில் சொன்னார்.
இந்த கோரத் தாக்குதல் தொடர்பில் 21,22 மற்றும் 31 வயதுடைய மூன்று
ஆடவர்கள் கைது செய்யப்பட்டு குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின்
கீழ் விசாரணைக்காக ஏழு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர்
குறிப்பிட்டார்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய இதர சந்தேகப்பேர்வழிகளைத் தாங்கள்
தொடர்ந்து தேடி வரும் வேளையில் கொலைக்கான காரணம்
ஆராயப்பட்டு வருகிறது என்றார் அவர்.


