(ஆர்.ராஜா)
செராஸ், ஆக. 21- புற்றுநோயால் அவதியுறும் பலாக்கோங் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த மூன்று இந்தியப் பெண்களுக்கு அதன் உறுப்பினர் வெய்ன் ஓங் சுன் வெய் நிதியுதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.
கடும் நோய்களால் அவதியுற்று வரும் கி. சுபாஷினி (வயது 48), நா.மகாலட்சுமி (வயது 62) மற்றும் து.கலாவதி (வயது 47) ஆகியோரின் சுமைகளை குறைக்கும் நோக்கில் இந்த உதவியை அவர் வழங்கினார்.
கழுத்து பாகப் புற்றுநோயால் சுபாஷினி அவதியுற்று வருகிறார். இவருக்குப் பள்ளிக்குச் செல்லும் சிறார்கள் உட்பட 8 பிள்ளைகள் உள்ளனர்.
மகாலட்சுமி மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், மாரடைப்பு, நீரிழிவு நோயால் இடது கால் துண்டிப்பு, கண் புரை நோய் என பல்வேறு வகை நோய்களினால் அவதியுற்று வருகிறார்.
இவரையடுத்து, மார்பக புற்றுநோயாளி கலாவதி. பள்ளி செல்லும் சிறார்கள் உட்பட இவருக்கு 7 பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் அனைவரையும் வெய்ன் ஓங் அவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று கண்டு நலம் விசாரித்தார்.
இச்சந்திப்பில் வெய்ன் ஓங்குடன், கவுன்சிலர் எட்வின் தாங் மற்றும் பலாக்கோங் சட்டமன்ற சேவை மையத்தின் முதிர்நிலை பணியாளர் மிஷால் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.


