ஷா ஆலம், ஆக. 21- அவசர காலங்களில் சட்டமன்றக் கூட்டங்களை இணையம் நடத்துவதற்கு ஏதுவாக நிரந்தர விதிகளில் திருத்தங்களை நிறைவேற்றிய சிலாங்கூரின் நடவடிக்கையை நாடாளுமன்றமும் பின்பற்றும்.
இந்த விவகாரத்தை நடைமுறைப்படுத்த சிலாங்கூர் நிர்ணயித்துள்ள வழிகாட்டுதல்களை நாடாளுமன்றமும் பயன்படுத்திக் கொள்ளும் என்று மக்களவை சபாநாயகர் டான்ஸ்ரீ ஜோஹாரி அப்துல் கூறினார்.
மற்ற மாநிலங்களை விட சிலாங்கூர் முன்னணியில் உள்ளது. நாடாளுமன்றம் கூட பின்தங்கித்தான் உள்ளது. ஆகவே, சிலாங்கூரிடம் இருந்து நாடாளுமன்றம் கற்றுக் கொள்ளும். இதன் தொடர்பில் நாங்கள் சட்ட வரைவை தயார் செய்தாலும் சிலாங்கூரின் வழிகாட்டுதல்களைப் பயன்படுத்துவோம் என அவர் குறிப்பிட்டார்.
உறுப்பினர்கள் அவையில் இல்லாவிட்டாலும்கூட மத்திய சட்டங்கள் அல்லது மாநில சட்டங்களை எவ்வாறு செயல்படுத்த முடியும் மற்றும் செல்லுபடியாகும் என்பதை இது காட்டுகிறது. கூட்ட விதிகளில் செய்யப்படும் பல திருத்தங்கள் மாநாட்டை நடத்த அனுமதிக்கின்றன என்று அவர் கூறினார்.
இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்றத்திற்கு வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் ஜோஹாரி இதனைத் தெரிவித்தார்.
கேள்விகளை நிர்வகிக்க இயங்கலை முறையைப் பயன்படுத்துவதற்கான மாநிலத்தின் நடவடிக்கையும் பின்பற்றப்பட வேண்டிய ஒன்றாகும் என அவர் சொன்னார்.
உறுப்பினர்களின் நேரடி வருகை முறையைப் பயன்படுத்தும் மாநிலங்கள் இன்னும் உள்ளன. கேள்விகள் பழைய பாணியிலே அனுப்பப்படுகின்றன. கெடா மற்றும் சிலாங்கூர் முன்னோக்கி சென்று மின்னியல் வழி கேள்விகளை அனுப்பும் முறையைப் பயன்படுத்துகின்றன. எனவே, மற்ற மாநிலங்களும் இதனைக் கற்றுக்கொள்ளலாம் என்றார் அவர்.
இந்த சிறந்த நடவடிக்கையை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட இரண்டு விஷயங்களும் எதிர்வரும் செப்டம்பரில் நடைபெற உள்ள 2024 ஆம் ஆண்டுக்கான அகில மலேசிய நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற சபாநாயகர் மாநாட்டில் முன்வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.


