புதுடில்லி, ஆக. 20 - மூன்று நாள் அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டு
இந்தியா சென்றுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு அதிபர்
மாளிகையான ராஷ்ட்ரபதி பவனில் இன்று சடங்குப்பூர்வ வரவேற்பு
நல்கப்பட்டது.
காலை 9.00 மணிக்கு அதிபர் மாளிகை வந்தடைந்த பிரதமர் அன்வாரை
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். இரு நாடுகளின் தேசிய
கீதம் இசைப்பட்டப் பின்னர் இரு தலைவர்களும் தங்களின் பேராளர்களை
அறிமுகம் செய்து வைத்தனர்.
வரவேற்புச் சடங்கிற்குப் பிறகு காந்தி நினைவு மையத்திற்குச் சென்ற
பிரதமர் அங்கு மலர் வளையம் வைத்து மரியாதைச் செலுத்தினார்.
இந்த நிகழ்வுக்குப் பின்னர் அவர் இந்திய வெளியுற அமைச்சர்
எஸ்.ஜெய்சங்கருடன் இங்குள்ள தங்கும் விடுதி ஒன்றில் சந்திப்பு
நடத்துவார்.
பின்னர் ஹைதரபாத் இல்லத்தில் உள் நீலகிரி சூட் வளாகத்தில்
கட்டுப்படுத்தப்பட்ட சந்திப்பை பிரதமர் அன்வார் மோடியுடன் நடத்துவார்.
அதன் பிறகு அதே இடத்தில் நண்பகலில் இரு தலைவர்களும் சந்திப்பு
நடத்துவர்.
ஹைதரபாத் இல்லத்தில் நடைபெறவிருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
கையெழுத்தாகும் நிகழ்வை பார்வையிடும் அன்வார் மோடியுடன்
செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்வார்.
இந்நிகழ்வுக்குப் பிறகு மோடி வழங்கும் அரசாங்க விருந்தில் அன்வார்
கலந்து கொள்வார். அதிபர் துரோபதி மர்முவுடனான மரியாதை நிமித்தச்
சந்திப்பிலும் பிரதமர் பங்கேற்பார்.
மாலை 5.00 மணிக்கு சப்ரு இல்லத்தில் நடைபெறும் தென் உலக
எழுச்சியை நோக்கி - மலேசிய-இந்திய உறவை மேம்படுத்துதல் எனும்
தலைப்பில் பிரதமர் உரை நிகழ்த்துவார்.


