கோலாலம்பூர், ஆக. 19 - மணியளவில் ரவாங், பண்டார் தாசேக் புத்ரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் எட்டு வயதுச் சிறுமியின் மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
அச்சிறுமியின் உடல் மீது இன்னும் சவப் பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை என்று கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நோர் அரிபின் முகமது நாசீர் கூறினார்.
தற்போதைக்கு அச்சிறுமியின் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்பதோடு அவரின் தாய் மற்றும் வளர்ப்புத் தந்தையிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
அச்சிறுமிக்கு மரணம் ஏற்படும் அளவுக்கு துன்புறுத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் அந்த சிறுமியின் சொந்த தாயாரையும் வளர்ப்புத் தந்தையையும் கடந்த சனிக்கிழமை இரவு 9.00 மணியளவில் ரவாங், பண்டார் தாசேக் புத்ரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தாங்கள் கைது செய்ததாக நோர் அரிபின் முகமது நாசீர் முன்னதாக கூறியிருந்தார்.
அன்றைய தினம் மாலை 3.27 மணியளவில் ரவாங், பண்டார் தாசேக் புத்ரியில் உள்ள ஒரு வீட்டில் அச்சிறுமி உயிரிழந்தது தொடர்பில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததை தொடர்ந்து இவ்விருவரும் கைது செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.
அச்சிறுமியின் முகம், கைகள், கால்கள் மற்றும் உடலில் காயங்களும் சிராய்ப்பு காயங்கள் காணப்பட்டன. கை,கால்களைக் கொண்டும் இடைவார், உடைகளை மாட்டும் ஹெங்கர் மற்றும் கடினமான பொருள்களாலும் அச்சிறுமி பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதை தொடக்கக் கட்ட சோதனைகள் காட்டுகின்றன என அவர் குறிப்பிட்டார்.
அச்சிறுமியின் உடல் சவப் பரிசோதனைக்காக சுங்கை பூலோ மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட வேளையில் இந்த சம்பவம் தொடர்பில குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர்.


