NATIONAL

கட்டார் ஏற்பாட்டில்  100,000 பாலஸ்தீன மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள் விநியோகம்

13 ஆகஸ்ட் 2024, 5:49 AM
கட்டார் ஏற்பாட்டில்  100,000 பாலஸ்தீன மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள் விநியோகம்

டோஹா, ஆக. 13 - கட்டார் தொண்டு நிறுவனம் (கியூ.சி.) 39 வாகன அணிகளின்  வாயிலாக 21,500 உணவுப் பொட்டலங்களை காஸா பகுதியில்  விநியோகித்துள்ளது என்று கட்டார் செய்தி நிறுவன அறிக்கையை மேற்கோள் காட்டி சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.

ஜோர்டான் ஹஷெமைட் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து இந்த உதவி வழங்கப்பட்டது.  இதன் வழி  காஸாவில் உள்ள  சுமார் 100,000 பேர் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு பொட்டலமும்   ஒரு குடும்பத்தின் ஒரு மாதத் தேவைக்குப்  போதுமானது என்று அந்த அறிக்கை கூறியது.

காஸா மீதான போர் தொடங்கியதிலிருந்து கட்டார் அறக்கட்டளையின் முன்னெடுப்புகளின் வாயிலாக தொடர்ச்சியாக உதவிகள்  வழங்கப்பட்டு வருகின்றன.  காஸாவில் உள்ள நமது சகோதர சகோதரிகளை ஆதரிப்பதும் உணவு, மருந்து, தங்குமிடம் போன்ற அத்தியாவசிய உதவிகளை  வழங்குவதன் மூலம் அவர்களின் துயரத்தைத் தணிப்பதும்தான் எங்களின் பிரதான இலக்காகும் என்று கியூ.சி.யின் அவசரநிலை மற்றும் நிவாரணத் துறையின் இயக்குநர் மனா அல் அன்சாரி கூறினார்.

ஜோர்டானில் உள்ள கியூ.சி. அலுவலகத்தால் வழங்கப்பட்ட மொத்த உணவுப் பொட்டலங்களின் எண்ணிக்கை இப்போது  40,000 ஆக உயர்ந்துள்ளது.  இது தவிர கிட்டத்தட்ட 15 டன் மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளதாக அந்த தொண்டு நிறுவனம் தெரிவித்தது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.