புத்ராஜெயா, ஆக 6 - லெபனானின் சமீபத்திய நிலவரங்களை வெளியுறவு அமைச்சு (விஸ்மா புத்ரா) அணுக்கமாகக் கவனித்து வருகிறது.
லெபனானின் திப்னின் மற்றும் மரக்காவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மலேசிய அமைதி காக்கும் படை (மல்பாட்) 850-11 மற்றும் அந்நாட்டிலுள்ள இதர மலேசியர்களின் பாதுகாப்பை மதிப்பிடுவதற்கு பெய்ரூட்டில் உள்ள மலேசிய தூதரகமும் மலேசிய பாதுகாப்பு அமைச்சும் ஐக்கிய நாடுகள் சபையுடன் தீவிரமாகத் தொடர்பு கொண்டு வருகின்றன என்று தெரிவித்தது.
இன்றுவரை தெற்கு லெபனானில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் மலேசியர்கள் பாதிக்கப்படவில்லை என்றும் இருப்பினும், நிலைமை கணிக்க முடியாததாகவே உள்ளதாகவும் விஸ்மா புத்ரா கூறியது.
லெபனானில் தொடர்ந்து தங்கியிருக்க விரும்பும் மல்பாட் படையில் அல்லாத அனைத்து மலேசியர்களும் தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும் அதேவேளையில் உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுறுத்தல்களை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு அது வலியுறுத்தியது.
தூதரகத்தில் இதுவரை பதிவு செய்யாதவர்கள் உதவி மற்றும் ஆகக்கடைசி நிலவரம் குறித்த தகவல்களைப் உடனடியாகப் பெறுவதை உறுதிப்படுத்த உடனடியாக அவ்வாறு செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று விஸ்மா புத்ரா குறிப்பிட்டது.
அந்நாட்டின் நிலவரத்தை மலேசியா தொடர்ந்து உன்னிப்பாகக் கவனித்து வரும். லெபனானில் உள்ள அனைத்து மலேசியர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்த தேவையான உதவிளையும் அது வழங்கும்.
தூதரக உதவி அல்லது கூடுதல் தகவல் தேவைப்படும் மலேசியர்கள் பெய்ரூட்டில் உள்ள மலேசிய தூதரகத்தை லாட் 170, சாத் ஜாக்லோல் தெரு, டவுன்டவுன், பெய்ரூட்டில் +961 71 380 063 அல்லது +961 76 772 527 என்ற தொலைபேசி எண்ணில் அல்லது mwbeirut@kln.gov.my என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளுமாறு விஸ்மா புத்ரா அறிவுறுத்தியது.


