கோலாலம்பூர், ஜூலை 26 - கென்யாவில் மூண்ட தெருப் போராட்டம் ஆறாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில் அந்த போராட்டத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் வசிக்கும் மலேசியர்கள் மிகவும் விழிப்புடன் இருக்கும் அதேவேளையில் அந்நாட்டு அதிகாரிகள் வழங்கும் ஆலோசனைகளைப் பின்பற்றி நடக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கென்யாவில் நிகழ்ந்து வரும் சம்பவங்களை நைரோபியில் உள்ள தூதரகத்தின் வாயிலான மலேசியா அணுக்கமாகக் கண்காணித்து வருவதோடு அந்நாட்டிலுள்ள பதிவு பெற்ற மலேசியர்களைத் தொடர்பு கொண்டும் வருகிறது என்று வெளியுறவு அமைச்சு (விஸ்மா புத்ரா) தெரிவித்தது.
சமீபத்திய நிலவரங்கள் குறித்து அறிந்து கொள்வதற்கும் தேவையான உதவிகளைப் பெறுவதற்கும் ஏதுவாக தூதரகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அங்குள்ள மலேசியர்களை வெளியுறவு அமைச்சு கேட்டுக்கொண்டது.
அந்நாட்டிலுள்ள உள்ள பிரஜைகளுக்கு உதவிகள் வழங்கவும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மலேசியத் தூதரகம் தயாராக உள்ளது என்று அமைச்சு அறிக்கை ஒன்றின் வாயிலாக கூறியது.
கடந்த ஜூன் 18ஆம் தேதி தொடங்கிய ஆட்சேப பேரணிகளின் இதுவரை 50 போராட்டக்காரர்கள் கொல்லப் பட்டுள்ளதோடு மேலும் 413 பேர் காயமடைந்துள்ளதாக கென்யா தேசிய மனித உரிமை ஆணையத்தை மேற்கோள் காட்டி அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


