தங்காக், ஜூலை 25: தொலைபேசி அழைப்பு மூலம் மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்ட , முன்னாள் அரசு ஊழியர் ஒருவருக்கு RM735,000 இழப்பு ஏற்பட்டது.
தன்னை ஒரு காவல்துறை அதிகாரி என்று அறிமுகப்படுத்திய நபரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், பாதிக்கப்பட்ட பெண் (67) பணமோசடி வழக்கில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்ததாகவும் தங்காக் மாவட்ட காவல் துறைத் தலைவர் ரோஸ்லான் முகமட் தாலிப் தெரிவித்தார்.
விசாரணைக்கு என கூறி சந்தேகநபர் வழங்கிய 10 வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு தனது பணத்தை மாற்றுமாறு பாதிக்கப்பட்டவரிடம் கூறப்பட்டதாக அவர் கூறினார்.
"இருப்பினும், பணத்தை மாற்றிய பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண் நேற்று காவல்துறையில் புகார் செய்தார்," என்று ரோஸ்லான் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
குற்றவியல் சட்டத்தின் 420 வது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுவதாக ரோஸ்லான் கூறினார்.
– பெர்னாமா


