கோலாலம்பூர், ஜூலை 25: நேற்றிலிருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் நூருல் ஆயிஷா ஃபர்ஹானா அஸ்னி என்ற 17 வயது இளம்பெண்ணை கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியை காவல்துறையினர் நாடியுள்ளனர்.
நேற்று மதியம் 12.42 மணிக்கு நூருல் ஆயிஷா ஃபர்ஹானா காணாமல் போனது குறித்த புகாரை அப்பெண்ணின் தந்தை பத்தாங் காலி காவல் நிலையத்தில் அளித்தார் என உலு சிலாங்கூர் மாவட்ட காவல்துறை துணைத் தலைவர் டிஎஸ்பி முகமட் அஸ்ரி முகமட் யூனுஸ் கூறினார்.
"நூருல் ஆயிஷா ஃபர்ஹானா கடந்த செவ்வாய்கிழமை இரவு 9.30 மணிக்கு ஜாலான் மஹாகோனி 7/1A பண்டார் உத்தாமா பத்தாங் காலி, சிலாங்கூரில் உள்ள சகோன் தாய் உணவகத்தில் இறுதியாகக் காணப்பட்டதாக நம்பப்படுகிறது" என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
நூருல் ஆயிஷா பர்ஹானா 150 முதல் 155 சென்டிமீட்டர் உயரமும் 50 முதல் 55 கிலோகிராம் எடையும் கொண்டவர் என்று முகமட் அஸ்ரி கூறினார்.
அந்த இளம்பெண் அடர் நீலம் கொண்ட நீண்ட கை டி-சர்ட், கருப்பு பேன்ட், வெளிர் பழுப்பு நிற செருப்பு மற்றும் தலையில் கருப்பு நிற துடோங் அணிந்திருந்தார்.
"இந்த பெண்ணை பற்றிய தகவல் தெரிந்த பொதுமக்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தையோ அல்லது குற்றப் புலனாய்வு அதிகாரி இன்ஸ்பெக்டர் முஹம்மது சைபுல் அப்துல் ரஹ்மானையோ 03-60641222 என்ற எண்ணிலும் மற்றும் உலு சிலாங்கூர் மாவட்டக் காவல்துறைத் தலைமையகத்தை 03-60641223 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை அழைப்பு விடுக்கிறது," என்று அவர் கூறினார். .
- பெர்னாமா


