கோலாலம்பூர், ஜூலை 24 - இணையவெளி நோக்கி பாரம்பரியக் குற்றங்கள் நகர்வது குறித்து தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தேசிய பாதுகாப்பு மன்றத்தின் தலைமை இயக்குநர் டத்தோ ராஜா நூர்ஷிர்வான் ஜைனல் அபிடின் மற்றும் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது சுஹைலி முகமது ஜைன் ஆகியோர் இன்று காலை தமக்கு விளக்கமளித்ததாக அவர் கூறினார்.
இறைவன் அருளால் சரியான நடவடிக்கைகள் மூலம் இணையம் மற்றும் சமூக ஊடகங்களை அனைவருக்கும் பாதுகாப்பானதாக மாற்றுவோம் என்று ஃபாஹ்மி முகநூல் பதிவில் தெரிவித்தார்.
முன்னதாக, இணையக் குற்றங்களுக்கு தீர்வு காணவும் விரைவான தொழில்நுட்ப முன்னேற்றங்களைத் தொடரவும் புதிய சட்டத்தை பரிசீலிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியிருந்தார்.
- பெர்னாமா


