சுபாங், ஜூலை 23 - உலகளாவிய நிலையிலான தகவல் தொடர்பு செயலிழப்பு காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் ஏர் ஆசியா நிறுவனத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேப்பிட்டல் ஏ பெர்ஹாட் நிறுவனத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி டோனி பெர்னாண்டஸ் வலியுறுத்தியுள்ளார்.
விமான நிறுவனச் சேவைக்கு பாதிப்பை ஏற்படுத்திய ஜூலை 17ஆம் தேதி சம்பவத்திற்கு யாரேனும் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் சொன்னார்.
நாம் தவறு செய்தால் அதற்கு நாம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது அடிப்படை கோட்பாடாகும். நாங்களும் இதர விமான நிறுவனங்களும் இதர வர்த்தக ஸ்தாபனங்களும் பெரும் இழப்பை சந்தித்துள்ளோம் என்று அவர் அவர் தெரிவித்தார்.
அவர்கள் நமக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இப்போதைக்கு நாம் பொறுத்திருந்த பார்க்க வேண்டியுள்ளது என்று சுபாங்கிலுள்ள சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா விமான நிலையத்தில் ஏர் ஆசியா நிறுவனத்தின் சேவையை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மாபெரும் தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு காரணமாக பல நாடுகளில் விமான நிறுவனங்கள், வங்கிகள், தகவல் ஊடகங்கள் மற்றும் மருத்துவமனை சேவைகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.
கடந்த சனிக்கிழமை தனது சமூக ஊடகத்தில் பதிவொன்றை வெளியிட்ட டோனி, உலகளாவிய தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு விமான நிறுவனங்களுக்கு பல லட்சம் வெள்ளி இழப்பை ஏற்படுத்தியதோடு பொது மக்களின் அன்றாட வாழ்க்கையிலும் பெரும் சிக்கலை ஏற்படுத்தியதாகக் கூறியிருந்தார்.
இந்த குளறுபடி காரணமாக டிக்கெட் விற்பனை மற்றும் நான்கு உள்நாட்டு விமானச் சேவை ரத்து உள்ளிட்ட இழப்புகள் ஏர் ஆசியா நிறுவனத்திற்கு ஏற்பட்டதாக டோனி தனது உரையில் குறிப்பிட்டார்.


