கோலாலம்பூர், ஜூலை 23 - சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா விமான நிலையத்தின் 3 மற்றும் 4வது மண்டலங்களின் மேம்பாடு மற்றும் சந்தைப்படுத்தலை முன்னெடுப்பதற்காக மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (எம்.எச்.ஏ.பி.) மற்றும் எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
சுபாங் விமான நிலைய மறுஉருவாக்கத் திட்டத்தின் (எஸ்.ஏ.ஆர்.பி.) கீழ் வணிக விமானம் மற்றும் விண்வெளிப் பிரிவுகளுக்காக பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட இந்த மண்டலங்களின் வளர்ச்சி, வணிக விமானங்களை நிறுத்தும் ஹேங்கர்களுக்கான சிறப்புப் புதிய பகுதியை நிர்மாணிப்பது மற்றும் விண்வெளி துறை சார்ந்த உற்பத்தியாளர்கள், பொருத்துவோருக்கு ஏற்ற வகையிலான விண்வெளி சுற்றுச்சூழல் அமைப்பைப் விரிவாக்குவது ஆகியவையும் அடங்கும்.
இங்கிலாந்தில் இன்று நடைபெறும் 2024 ஃபார்ன்பரோ அனைத்துலக விமானக் கண்காட்சியில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
பிராந்தியத்தில் புதுமை, நிலைத்தன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சியை வளர்ப்பதற்கு ஒரு வலுவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க இந்த ஒப்பந்தம் உதவும் என்று அவ்விரு நிறுவனங்களும் இன்று வெளியிட்ட ஒரு கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.
இரு நிறுவனங்களின் வளங்கள் மற்றும் நிபுணத்துவத்தை இணைப்பதன் மூலம் நிலையான பொருளாதார வளர்ச்சி மற்றும் உள்ளூர் சமூகத்திற்கு புதிய வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று எம்.எச்.ஏ.பி. பிரதிநிதியும் கே எல்.ஐ.ஏ. ஏரோபோலிஸ் சென். பெர்ஹாட் தலைவருமான ரண்டில் சிங் கூறினார்.
இந்தக் கூட்டுத் திட்டம் உலகளாவிய விமானப் போக்குவரத்து மற்றும் விண்வெளித் தொழில்களில் மலேசியாவின் இடத்தை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது என அவர் சொன்னார்.


