கோலாலம்பூர், ஜூலை 23 - மலேசியாவில் நிகழும் ஒட்டுமொத்த
மரணங்களில் சுமார் 23.3 விழுக்காடு இருதய இரத்தநாள நோய் (சிவிடி)
தொடர்புடையவையாக இருப்பதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர்
ஜூல்கிப்ளி அகமது கூறினார்.
ஆர்தரோகிளிரோட்டிக் சிடிவி எனப்படும் இரத்த நாள இறுக்கத்திற்கு உயர்
கொலஸ்ட்ரோல் அளவு காரணமாக இருப்பதோடு இது நோய் பாதிப்பு
மற்றும் மரண எண்ணிக்கை அதிகரிப்புக்கு வழி வகுக்கிறது என அவர்
குறிப்பிட்டார்.
நாட்டிலுள்ள 18 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 33.3 விழுக்காட்டினர்
அல்லது 76 லட்சம் பேர் உயர் கொலஸ்ட்ரோல் அளவுப் பிரச்சனையை
கொண்டுள்ளது 2023ஆம் ஆண்டு தேசிய சுகாதாரம் மற்றும் நோயியல்
ஆய்வில் தெரிய வந்துள்ளது என அவர் தெரிவித்தார்.
உடலில் கொலஸ்ட்ரோல் அளவு எந்த அறிகுறியையும் காட்டாது
என்பதால் நாட்டிலுள்ள பெரியவர்களில் இருவரில் ஒருவர் தனக்கு
கொலஸ்ட்ரோல் அளவு அதிகம் உள்ளதை அறியாமலிருக்கின்றனர். இது
மிகவும் கவலையளிக்கும் விஷயமாக உள்ளது என அவர் சொன்னார்.
இதற்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டாலும் இந்நோயினால் ஏற்படும்
சவால்கள் அப்படியே உள்ளன. உடலில் கொலஸ்ட்ரோல் அளவைக்
குறைப்பது பல நோயாளிகளின் குறிப்பாக நோய் அபாயம் அதிகம்
உள்ளவர்களின் பிரதான இலக்காக இருப்பதில்லை. இந்த
இடைவெளியைக் குறைப்பதுதான் நமது பிரதான நோக்கமாகும் என்றார்
அவர்.
ஐ.ஜே.என். எனப்படும் தேசிய இருதய கழகத்தின் இருதய இரத்தநாள
தாக்கத் தணிப்பு கிளினிக்கின் (சி.ஆர்.ஆர்.சி.) புத்தாக்க திட்டத்தை தொடக்கி
வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த சி.ஆர்.ஆர்.சி. திட்டம் ஈராண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது
முதல் இதுவரை 600 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு அவர்களின்
ஆரோக்கியமும் வாழ்க்கைத் தரமும் மேம்பட்டுள்ளது என்று ஜூல்கிப்ளி
தெரிவித்தார்.


