சிப்பாங், ஜூலை 23- வங்காளதேசத்தில் நிலவி வரும் பதற்றம் காரணமாக
அந்நாட்டிலுள்ள மலேசியர்களைத் தாயகம் கொண்டு வர பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இட்ட உத்தரவைத் தொடர்ந்து சிறப்பு
விமானம் ஒன்று இன்று காலை 7.30 மணிக்கு கோலாலம்பூர் அனைத்துலக
விமான நிலையத்தின் 2வது முனையத்திலிருந்து அந்நாட்டிற்குப்
புறப்பட்டது.
சுமார் 350 பேர் வரை பயணிக்கும் வசதி கொண்ட அகண்ட உடலமைப்பு
கொண்ட அந்த ஏர் ஆசியா ஏ330 ரக தூ விமானம் இன்று காலை 7.20
மணியளவில் டாக்கா, ஹஸ்ராட் ஷஜஹால் அனைத்துலக விமான
நிலையத்திற்குப் பயணமானது.
டாக்காவிலுள்ள மலேசிய தூதரகத்தில் மாணவர்கள் உள்பட 100க்கும்
மேற்பட்டோர் நேற்று முதல் அடைக்கலம் நாடியுள்ளதாக இந்த
பயணக்குழுவுக்கு தலைமையேற்றுள்ள வெளியுறவு அமைச்சின்
தெற்காசியா மற்றும் மத்திய ஆசியாவுக்கான செயலாளர் டத்தோ டாக்டர்
ஷாசெலினா ஜைனால் அபிடின் கூறினார்.
இந்த பயணம் கடந்த ஜூலை 12ஆம் தேதி முதல் திட்டமிடப்பட்டு வந்தது.
எனினும், 12 மணி நேரத்திற்கும் குறைவான கால அவகாசத்தில்
அத்திட்டம் அமலாக்கம் கண்டது. வங்காளதேசத்திலுள்ள நமது
தூதரகத்திடமிருந்து உரிய அனுமதி கிடைத்தவுடன் விமானத்தை ஏற்பாடு
செய்தோம். மாணவர்கள் அனைவரும் டாக்காவிலுள்ள மலேசிய
தூதரகத்திற்கு வந்து சேர்ந்து விட்டதை உறுதி செய்வதில் மட்டுமே சிறிது
காலத் தாமதம் ஏற்பட்டது என்றார் அவர்.
இந்த பயணக்குழுவில் விஸ்மா புத்ரா, தேசிய பாதுகாப்பு மன்றம், தேசிய
செய்தி நிறுவனமான பெர்னாமா ஆகியவற்றைச் சேர்ந்த 15 பேர் இடம்
பெற்றுள்ளனர் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
வங்காளதேசத்தில் பதற்றம் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு
அந்நாட்டிலுள்ள மலேசியா மாணவர்களை உடனடியாக நாட்டிற்குக்
கொண்டு வருவதற்கு அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ
அன்வார் இப்ராஹிம் நேற்று கூறியிருந்தார்.


