NATIONAL

பிரதமருக்கு எதிரான கொலை மிரட்டல்களை முறியடிக்க ஃபாஹ்மி உறுதி

15 ஜூலை 2024, 9:00 AM
பிரதமருக்கு எதிரான கொலை மிரட்டல்களை முறியடிக்க ஃபாஹ்மி உறுதி

புத்ராஜெயா, ஜூலை 15 - வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில்  மனதைப் புண்படுத்தும், அச்சுறுத்தும் மற்றும் வன்மம்  நிறைந்த கருத்துக்களை வெளியிடும் நபர்கள் மீது அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் எச்சரித்துள்ளார்.

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு எதிராக  கொலை மிரட்டல் உள்ளிட்ட ஒழுங்கீன  மற்றும் மிரட்டும் பாணியில்  அறிக்கைகள் பரப்பப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

முன்னாள் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப்பிற்கு எதிரான படுகொலை  முயற்சிக்குப் பிறகு, வாட்ஸ் ஆப் செயலி மூலம்  சில ஒழுங்கீன  மற்றும் குற்றத் தன்மையிலான  மிரட்டல்கள் எடுக்கப்படுகின்றன என்று அவர் இன்று தகவல் தொடர்பு அமைச்சின் மாதாந்திர ஒன்று கூடும் நிகழ்வில்   கூறினார்.

சுடப்பட வேண்டியவர்கள் அங்கே (அமெரிக்காவில்) மட்டும் இல்லை என்று சிலர் கூறுகிறார்கள். அவர்கள் பிரதமருக்கு எதிரான வன்முறை, கிரிமினல் மற்றும்  கொலை மிரட்டலை மறைமுகமாக வெளிப்படுத்துகின்றனர். மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் வரம்பு மீறிச் செல்ல வேண்டாம். இது மிகவும் மூர்க்கத்தனமானது என்று அவர் சொன்னார்.

இதற்கிடையில், அந்தந்த சமூக ஊடக தளங்களில் பிரசுரமாகும்    செய்திகள் குறித்து வெளியிடப்படும்  கடுமையான  கருத்துகளைத் தொடர்ந்து, மலேசிய ஊடகத் துறையின் பிரதான ஆசிரியர்களை தாம்  விரைவில் சந்திக்க இருப்பதாக  ஃபாஹ்மி கூறினார்.

நான் சில உறுதியான மற்றும் வலுவான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறேன். ஏனெனில் நான் பேரரசரின் ( மாட்சிமை தங்கிய சுல்தான் இப்ராஹிம்) ஆணையை  நிலை நிறுத்துகிறேன்.  பொது ஒழுங்கை பராமரிக்க சமூக ஊடகங்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சரவை கூட விரும்புகிறது என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.