ஷா ஆலம், ஜூலை 15: சிலாங்கூர் விண்வெளி நடவடிக்கை திட்டம் 2020-2030, மாநிலத்தின் விண்வெளி வளர்ச்சிக்கு உந்துதலாகவும் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் முக்கிய தொழில்துறை மையமாகவும் மாற்றும்.
10 ஆண்டு திட்டமிடல் நடவடிக்கையில் உள்ள பல்வேறு திட்டங்கள் மற்றும் உத்திகளை செயல்படுத்துவதன் மூலம் இலக்கை அடைய முடியும் என முதலீட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் இங் சீ ஹான் கூறினார்.
"உலகளவில், விண்வெளித் துறை ஒவ்வொரு ஆண்டும் 5.9 சதவிகித வளர்ச்சியுடன் 2030ஆம் ஆண்டில் RM2.6 டிரில்லியன் வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"பயணிகள் போக்குவரத்து வளர்ச்சியின் கட்டமைப்பிற்குள் இதை அடைய முடியும். இது 6.1 சதவிகிதம் அதிகரிக்கும் மற்றும் விமான நிறுவனங்களின் சொத்துக்களையும் 3.5 சதவிகிதம் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"கடந்த ஆண்டு, சிலாங்கூர் உற்பத்தி துறையில் RM19.3 பில்லியன் முதலீட்டை பதிவு செய்த நிலையில் முந்தைய ஆண்டு RM12.2 பில்லியனாக இருந்தது. அந்த மதிப்பின் ஒரு பகுதி விண்வெளி துறையில் முதலீடுகளை உள்ளடக்கியது," என்று அவர் மாநில சட்டமன்ற அமர்வில் கூறினார்.
இத்துறையை மேலும் மேம்படுத்த டசால்ட் ஏவியேஷன், காலின்ஸ் ஏரோஸ்பேஸ், ஸ்மார்ட்லிங்க் இன்ஜினியரிங், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இன்ஜினியரிங் மற்றும் மலேசியா ஏர்லைன்ஸ் இன்ஜினியரிங் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட பல திட்டங்களையும் அவர் விளக்கினார்.
பண்டார் பாரு கிள்ளான் மாநில சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குவா பெர்ங் ஃபேயின் கேள்விக்கு பதிலளித்த அவர், தரம் மற்றும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களின் மூலம் விண்வெளி மேம்பாட்டை தீவிரப்படுத்துவதற்கான ஒரு படியாக ``Invest Selangor Sdn Bhd`` தொழில்முனைவோருடன் ஒத்துழைப்பை ஏற்படுத்தியது என்றார்.
துருக்கியிலிருந்து முன்னணி பிராண்டு ஹெலிகாப்டர்களை தயாரிப்பது போன்ற விநியோகச் சங்கிலிகளைக் கொண்டுவருவதற்கு கலந்துரையாடல் அமர்வுகளை நடத்துவதும், தொடர்புடைய நிறுவனங்களுடன் தொடர்பு ஏற்படுத்தி கொள்வதும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் ஒன்றாகும்.
"தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மலேசியா ஒரு விருப்பமான பிராந்தியமாக உள்ளது என்பதை ஆய்வு மற்றும் அமர்வின் முடிவுகளால் கண்டறியப்பட்டது.
"கூடுதலாக, சிலாங்கூர் விண்வெளி பயிற்சி திட்டம் (SAAP) இளைஞர்களுக்கு அவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது. அத்துடன் திறமையான பணியாளர்களை தக்கவைத்துக்கொள்வதற்கான ஊக்கத்தொகைகளையும் வழங்குகிறது," என்று அவர் கூறினார்.


