கூலிம், ஜூலை 11- எலி மருந்து கலந்து கெரோப்போக் தின்பண்டத்தை
இரு சிறார்கள் உண்டச் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு
உதவுவதற்காக ஆடவர் ஒருவர் இன்று தொடங்கி ஆறு நாட்களுக்கு
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிறார் பாதுகாப்பை அலட்சியப்படுத்தியது தொடர்பில் 611வது சட்டத்தின்
31(1)(ஏ) பிரிவு மற்றும் தண்டனைச் சட்டத்தின் 284வது பிரிவின் கீழ்
அவ்வாடரைத் தடுத்து வைப்பதற்கான அனுமதியை கூலிம் செசன்ஸ்
நீதிமன்ற நீதிபதி மிர்ஸா முகமது வழங்கினார்.
லாக்கப் உடை அணிந்திருந்த அந்த ஆடவர் இன்று காலை 8.00
மணியளவில் நீதிமன்றம் கொண்டு வரப்பட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்குள்ள லாபு பெசார், கம்போங் பாடாங்
உபியில் உள்ள தோட்டம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த எலி விஷம்
தடவப்பட்ட கெரோப்போக் நொறுக்குத் தீனியை உட்கொண்ட இரு
சிறார்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி
வெளியிட்டிருந்தன.
முகமது அக்கில் ஷியாக்கி நுர் சுஃப்யான் (வயது 3) மற்றும் அவனது
தம்பியான முகமது லுத் ஷியாக்கி (வயது 2) ஆகிய இருவரும் அந்த
தோட்டத்தின் வேலியில் வைக்கப்பட்டிருந்த எலி மருந்து தடவப்பட்ட
கெரோப்போக் பாக்கெட்டை எடுத்து அதிலிருந்த உணவை உண்டதாக
சந்தேகிக்கப்படுகிறது.
அவ்விரு சிறார்களும் சிகிச்சைக்காகப் பினாங்கு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அக்கில் ஷியாக்கி சிகிச்சை பலனின்றி
நேற்று காலை 8.40 மணியளவில் உயிரிழந்தார். தொடர்ந்து சிகிச்சைப்
பெற்று வரும் அவரின் தம்பிக்கு இன்னும் சுயநினைவு திரும்பவில்லை.


