கோலாலம்பூர், ஜூலை 11- சிங்கப்பூரில் ஏற்பட்டுள்ள கடல்சார் நெரிசல்
காரணமாக அங்கு நீண்ட நாட்கள் காத்திருப்பதைத் தவிர்ப்பதற்காக
மலேசியாவுக்கு திருப்பி விடப்படும் பெரும் எண்ணிக்கையிலான
கொள்கலன், சரக்கு மற்றும் பயணிகள் கப்பல்களை கையாளும் முழுத்
திறனை கிள்ளான் துறைமுகம் கொண்டுள்ளது.
நுழைவாயில்களைத் திறப்பதை ஒருமுகப்படுத்துவது, கப்பல்களுக்கு
முன்னுரிமை அளிப்பது உள்ளிட் நடவடிக்கைகள் மூலம் கப்பல்களை
விரைவாகவும், தாமத நேரத்தைக் குறைத்தும் நெரிசலைத் தவிர்த்தும்
கையாளும் ஆற்றலை மலேசியத் துறைமுகங்கள் கொண்டுள்ளன.
பெர்த் எனப்படும் கப்பல் அணையும் இட வாடகை மிக அதிகம் என்பதால்
கப்பல் திரும்பும் நேரம் தாமதமில்லாத வகையில் இருந்தால்
சிறப்பானதாக இருக்கும் என்று கிள்ளான் துறைமுக வாரியத்தின் பொது
நிர்வாகி கேப்டன் கே. சுப்பிரமணியம் கூறினார்.
தற்போது நம்வசம் 12 கொள்லன் கப்பல்கள் நங்கூரமிடும் பகுதிக்கு
வெளியே நிற்கின்றன. அக்கப்பல்களைக் கையாள்வதற்கு 12 முதல் 24
மணி நேரத்திற்கு மேல் ஆகாது என்று பெர்னாமா செய்தி நிறுவனத்திற்கு
அளித்தப் பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.
ஆசியாவின் மிகவும் பரபரப்பான கடல் மார்க்கத்தில் அமைந்துள்ள
துறைமுகங்களில் ஏற்பட்டுள்ள வரும் ஆகஸ்டு மாதம் வரை நீடிக்கும்
என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
செங்கடலில் நிலவும் பாதுகாப்பு பிரச்சனைகள் காரணமாகப் பல கப்பல்
நிறுவனங்கள் தங்கள் வழித்தடங்களை மாற்றியுள்ளன. சூயஸ்
கால்வாய்க்குப் பதிலாக நன்னம்பிக்கை முனையை அவை சுற்றி
வருகின்றன.
கப்பல் அதிகரிப்பினால் சிங்கப்பூரில் வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டிய
சூழல் ஏற்பட்டுள்ளது. எனினும், பல கப்பல்கள் சிங்கப்பூரைத் தவிர்த்து
தஞ்சோங் பெலேப்பாஸ் மற்றும் கிள்ளான் துறைமுகத்திற்கு வரும்
காரணத்தால் அந்நாட்டில் நெரிசல் குறைந்து வருகிறது.


