கோலாம்பூர், ஜூலை 10 - மலேசியா ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட் ஹோல்டிங்
பெர்ஹாட் (எம்.ஏ.எச்.பி.) நிறுவனத்தின் 30 விழுக்காட்டு சிறுபான்மை
பங்குரிமை தொடர்பில் கஸானா நேஷனல் மற்றும் ஊழியர் சேம நிதி
வாரியத்தின் தலைமையிலான குழுமத்தின் உறுப்பினர்கள் நடத்திய
பேச்சுகளில் சொத்து மேலாண்மை நிறுவனமான பிளேக்ரோக் பங்கு
கொள்ளவில்லை.
ஜி.ஐ.பி எனப்படும் குளோபல் இன்ப்ராஸ்ட்ரச்கர் பார்ட்னர்ஸ் நிறுவனத்தை
பிளேக்ரோக் பிற்காலத்தில் கையகப்படுத்தினாலும் அந்த நிறுவனத்தின்
வியூக இலக்கை நிர்வகிக்கும் பொறுப்பு ஜி.ஐ.பி. நிர்வாகம் மற்றும் அதன்
முதலீட்டு நிறுவனங்கள் வசம் முழுமையாக இருக்கும் என அந்த
குழுமத்தின் உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளனர்.
ஜி.ஐ.பி. நிறுவனம் பிளேக்ரோக்கிடமிருந்து பிரிந்து தனியாகச் செயல்படும்
என்பது இதன் பொருளாகும். அபுடாபி இன்வெஸ்மெண்ட் முகமை மற்றும்
ஜி.ஐ.பி. ஆகியவை எம்.ஏ.எச்.பி. நிறுவனத்தில் 30 விழுக்காட்டு
சிறுபான்மைப் பங்குகளைக் கொண்டிருக்கும். இதன் வழி எம்.ஏ.எச்.பி.
தொடர்பான எந்த முக்கிய முடிவும் அந்த குழுமத்தில் இடம் பெற்றுள்ள
உறுப்பினர்களின் ஒப்புதலின் பேரில் மட்டுமே மேற்கொள்ளப்படும் என
மக்களவையில் நேற்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த வர்த்தகப் பரிமாற்றத்தில் பிளேக்ரோக் அறவே
சம்பந்தப்படவில்லை என்று பாடாங் செராய் உறுப்பினர் டத்தோ அஸ்மான்
நசாருடின் எழுப்பிய கேள்விக்கு அளித்த பதிலில் குறிப்பிட்டுள்ளது.
ஜி.ஐ.பி. நிறுவனத்தின் எதிர்கால உரிமையாளராக பிளேக்ரோக் ஆகவுள்ள
நிலையில் எம்.ஏ.எச்.பி பங்குகளை அந்நிறுவனத்திற்கு விற்பதற்கான
நியாயமான காரணங்கள் என்ன என்று டத்தோ அஸ்மான்
கேள்வியெழுப்பியிருந்தார்.
நீண்டக் கால முதலீடுகள் மற்றும் திட்டங்கள் தொடர்பான முடிவுகளை
விரைவாக எடுப்பதற்கு எம்.ஏ.எச்.பி. நிறுவனத்தை தனியார்
மயமாக்குவதே சிறந்த முடிவாகும் என அந்த குழுமத்தின் உறுப்பினர்கள்
கருதுகின்றனர் என்று அமைச்சு மேலும் தெரிவித்தது.


