ஜோகூர் பாரு, ஜூலை 10 - தேசிய மற்றும் சிலாங்கூர் எஃப்.சி. கால்பந்து விளையாட்டாளரான ஃபைசால் ஹலீம் மீதான எரிதிராவகத் தாக்குதல் தொடர்பில் புதிய மேம்பாடுகளைக் காவல்துறை பெறவில்லை.
இந்த தாக்குதல் தொடர்பான விசாரணையை நாங்கள் நிறுத்த மாட்டோம் என்று புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது சுஹைலி முகமது ஜைன் கூறினார்.
புதிய முன்னேற்றங்கள் எதுவும் இல்லை. ஆனால் எந்த புதுத் தகவலும் இல்லை என்பது நாங்கள் விசாரணையை நிறுத்தி விட்டோம் என்று பொருள்படாது என அவர் சொன்னார்.
மற்ற வழக்குகளில் எனது அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் நிலையில் இந்த விசாரணையை நாங்கள் ஒருபோதும் நிறுத்தவில்லை. (விசாரணை) பொதுமக்கள் எதிர்பார்க்கும் முன்னேற்றங்கள் மட்டுமே இப்போது இல்லை. எனவே தற்போதைக்கு நாங்கள் உளவுத்துறையை (ஆதார சேகரிப்பு) நம்பியுள்ளோம் என்று அவர் கூறினார்.
இங்குள்ள சுல்தான் இஸ்கந்தர் கட்டிடத்தில் நேற்று நடைபெற்ற அரச மலேசியன் காவல்துறைக்கும் சிங்கப்பூர் காவல்துறைக்கும் இடையிலான கூட்டு ஊடகவியலாளர் கூட்டத்தின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த மே 5ஆம் தேதி , 26 வயதான ஃபைசல் கோத்தா டாமன்சாராவில் உள்ள ஒரு பேரங்காடியில் எரிதிராவகத் தாக்குதலுக்கு ஆளானார்.


