ஷா ஆலம், ஜூலை 5 - டி.ஆர்.டி. எனப்படும் கோரிக்கை அடிப்படையிலான
டிரான்சிட் பயணச் சேவையை நடத்துவதற்கு தரைப் போக்குவரத்து
நிறுவனத்தின் (அபாட்) அங்கீகாரம் பெறாத நிறுவனங்களை நியமித்தால்
மாநில அரசு சட்ட சிக்கலை எதிர்கொள்ளும் அதேவேளையில்
பயணிகளின் பாதுகாப்புக்கும் பாதிப்பு ஏற்படும்.
ஆசியா மோபிலிட்டி டெக்னோலோஜிஸ் சென். பெர்ஹாட் மற்றும் பாடான்
பஸ் கோச் சென். பெர்ஹாட் ஆகிய நிறுவனங்கள் முறையான
அங்கீகாரத்தைக் கொண்டிருக்கும் காரணத்தால் சிலாங்கூர் மாநிலத்தில்
பி.ஓ.சி. எனப்படும் கருத்தியல் ஆதாரத்தை மேற்கொள்ள அனுமதி
வழங்கப்பட்டதாகப் போக்குவரத்து துறைக்கான மாநில ஆட்சிக்குழு
உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
இந்த கருத்தியல் ஆதார நடவடிக்கையின் வாயிலாக இந்த முன்னோடித்
டி.ஆர்.டி. திட்டம் தொடர்பான விரிவானத் தரவுகளைப் பெறுவதையும்
இவ்விரு நிறுவனங்களின் நியமனம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று
அவர் தெரிவித்தார்.
பிற்காலத்தில் இச்சேவையை முழுமையாக அமல்படுத்தும் போது இந்த
தரவுகள் முக்கிய வழிகாட்டியாக விளங்கும் என்று மாநில
சட்டமன்றத்தில் இன்று உரையாற்றும் போது அவர் குறிப்பிட்டார்.
அபாட் அனுமதியைப் பெறாத நிறுவனங்களை நியமிக்கும் பட்சத்தில்
நடப்புச் சட்டங்களுக்கு முரணாக செயல்பட்டது தொடர்பில் பல்வேறு
பிரச்சனைகளை மாநில அரசு எதிர்நோக்க நேரிடும் என்பதோடு
பயணிகளின் பாதுகாப்பு குறித்த கேள்வியும் எழும் என அவர் சொன்னார்.
டி.ஆர்.டி. முன்னோடித் திட்டத்திற்கு மாநில அரசு வெளிப்படையான
டெண்டர் முறையைப் பயன்படுத்தாமல் இரு நிறுவனங்களை நேரடியாக
நியமித்தது ஏன் என்று கோம்பாக் செத்தியா உறுப்பினர் முகமது ஹில்மான் இட்ஹாம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவ்விரு நிறுவனங்களும் முன்வைத்த இத்திட்ட செயலாக்கம் தொடர்பான
விளக்கங்களை டி.ஆர். முன்னோடித் திட்ட அமலாக்க குழு ஏற்றுக்
கொண்டதன் பேரில் இந்த நியமனம் தொடர்பான முடிவு எடுக்கப்பட்டது
என்றார் அவர்.


