நிபோங் திபால், ஜூலை 5 - சுங்கை பாக்காப் இடைத் தேர்தலுக்கான 14
நாள் பிரச்சாரம் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வரும் நிலையில் தங்கள்
பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பதற்கு அத்தொகுதியில் உள்ள 39,222 பதிவு
பெற்ற வாக்காளர்கள் நாளை தங்கள் ஜனநாயகக் கடமையை
நிறைவேற்றவுள்ளனர்.
இந்த இடைத் தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் ஜோஹாரி
அரிபின் மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் அபிடின்
இஸ்மாயில் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. சுங்கை பாக்காப்
சட்டமன்ற உறுப்பினர் நோர் ஜம்ரி லத்திப் உடல் நலக்குறைவு காரணமாகக்
கடந்த மே மாதம் 24ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதியில்
இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
நிபோங் திபால் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள மூன்று சட்டமன்றத்
தொகுதிகளில் சுங்கை பாக்காப்பும் ஒன்றாகும்.
அத்தொகுதியில் உள்ள 39,279 பதிவு பெற்ற வாக்காளர்களில் 39,222 பேர்
நாளை வாக்களிக்கும் தகுதியைப் பெற்றுள்ளதை தேர்தல் ஆணையத்தின்
தரவுகள் காட்டுகின்றனர். காவல் துறை உறுப்பினர்களாக இருக்கும் இதர
57 வாக்காளர்கள் கடந்த 2ஆம் தேதி நடைபெற்ற தொடக்கக் கட்ட
வாக்களிப்பில் கலந்து கொண்டனர்.
வாக்குப் பதிவு நாளை காலை 8.00 மணி தொடங்கி மாலை 6.00 மணி
வரை நடைபெறும். இந்த தேர்தலுக்காக 65 வாக்களிப்புத் தடங்களை
உள்ளடக்கிய ஒன்பது வாக்களிப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
வாக்குகளை மொத்தமாக எண்ணும் பணி தாமான் டேசா ஜாவியில் உள்ள
ஜாவி பல்நோக்கு மண்டபத்தில் நாளை இரவு நடைபெறும்.
கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் நடைபெற்ற பினாங்கு மாநிலத் தேர்தலின்
போது சுங்கை பாக்காப் தொகுதியை நிபோங் திபால் பாஸ் கட்சித்
தலைவரான நோர் ஜம்ரி பி.கே.ஆர். கட்சியிடமிருந்து கைப்பற்றினார்.


