கோலாலம்பூர், ஜூலை 5 - கிள்ளான் வடக்கு துறைமுகத்தில் கடந்த மாதம்
3ஆம் தேதி இரு கொள்கலன்களை பறிமுதல் செய்ததன் மூலம்
மதுபானங்களைக் காய்கறிகள் எனப் பிரகடனப்படுத்தி கடத்தி வந்த
கும்பலை அரச மலேசிய சுங்கத் துறை முறியடித்துள்ளது.
அன்றைய தினம் இரவு 11.30 மணியளவில் சுங்கத் துறையின் மத்திய
பிராந்தியத்தின் 1ஆம் பிரிவு மேற்கொண்ட அதிரடிச் சோதனையில்
அவ்விரு கொள்கலன்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்கத் துறையின்
மத்திய பிராந்திய உதவி தலைமை இயக்குநர் நோர்லேலா இஸ்மாயில்
கூறினார்.
அந்த கொள்கலன்களைச் சோதனையிட்ட போது அதில் சீனாவிலிருந்து
கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 8,600 லிட்டர் மதுபானம் இருந்த
தாகக் கூறிய அவர், வரியுடன் சேர்த்து அந்த மதுபானங்களின் மதிப்பு
160,300 வெள்ளியாகும் என்றார்.
அதிகாரிகள் கண்டுபிடிக்காமலிருப்பதற்காகப் பிரகடனப் பாரங்களில்
மதுபானங்களை காய்கறிகள் என பொய்யாகக் குறிப்பிடுவது இக்கும்பலின்
ஏமாற்று பாணியாகும் என அவர் தெரிவித்தார்.
அந்த கொள்கலன்களில் ப்ரோக்காலி மற்றும் முட்டைக்கோசு போன்ற
காய்கறிகளுக்குப் பின்னால் மதுபானங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது
சோதனையில் கண்டறியப்பட்டது என்று அவர் நேற்று கிளானா
ஜெயாவிலுள்ள சுங்கத் துறை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்
கூட்டத்தில் தெரிவித்தார்.
இந்த பறிமுதல் தொடர்பில் கப்பல் முகவர் ஒருவர் விசாரணைக்காக
அழைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், இதன் தொடர்பில் 1967ஆம் ஆண்டு
சுங்கத் துறை சட்டத்தின் 135(1)(டி) பிரிவின் கீழ் விசாரணை
மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
இதனிடையே, செராஸ், 11வது மைலில் உள்ள கைவிடப்பட்ட கிடங்கு
ஒன்றில் சுங்கத் துறையின் மத்திய பிராந்திய கோப்ரா பிரிவு கடந்த ஜூன்
19ஆம் தேதி மேற்கொண்ட சோதனையில் 13 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி
மதிப்புள்ள 15.6 லட்சம் வெள்ளை மற்றும் கிரேத்தெக் சிகிரெட்டுகள்
பறிமுதல் செய்யப்பட்டன என்று அவர் மேலும் சொன்னார்.


