ஷா ஆலம், ஜூலை 5 - மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (கே.டி.என்.கே.)
சிலாங்கூரின் பங்களிப்பு கடந்தாண்டு 25.9 விழுக்காடாக அதிகரித்தது
மாநில அரசு நிர்வாகம் சரியான தடத்தில் பயணிப்பதை நிரூபிக்கும்
வகையில் உள்ளது.
பெருந்தொற்றுக்குப் பிந்தைய மற்றும் உலகச் சவால்களுக்கு மத்தியிலும்
மாநில பொருளாதாரத்திற்கு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
தலைமையிலான நிர்வாகம் நேர்மறையான தாக்கத்தைக் கொண்டு
வந்துள்ளதாக அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்
இஷாம் ஹஷிம் கூறினார்.
உள்நாட்டு உற்பத்தியில் நமது பங்களிப்பு அதிகரிப்பு நாம் சரியான
தடத்தில் பயணிப்பதைக் காட்டுகிறது. முன்புபோல் இல்லாவிட்டாலும்
தேசிய வளர்ச்சி விகிதத்தைக் காட்டிலும் நமது வளர்ச்சி உயர்வு
கண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்று இங்கு மாநில சட்டமன்றக் கூட்ட இடைவேளையின் போது
செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இதனிடையே, எதிர்க்கட்சிகள் உள்பட அனைத்துத் தரப்பினரிடமிருந்து
ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் சிலாங்கூர் தொடர்ந்து வளர்ச்சியைப் பதிவு
செய்ய முடியும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்
குணராஜ் ஜோர்ஜ் சொன்னார்.
அரசு நிர்வாகத்திற்கு ஆதரவு தாருங்கள். தீட்டப்பட்டத் திட்டங்களை
நிறைவேற்ற இது மிக அவசியம். இதன் மூலம் மாநிலம் வளர்ச்சி கண்ட
மக்களும் சுபிட்சம் பெற முடியும் என அவர் கூறினார்.
உள்நாட்டு உற்பத்தியில் சிலாங்கூரின் பங்களிப்பு அதிகரித்துள்ளதைப்
பாராட்டிப் பேசிய பெர்மாத்தாங் தொகுதி உறுப்பினர் நுருள் ஷியாஸ்வானி
நோ, புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு குறிப்பாகக் குறைந்த வருமானம் பெறுவோருக்கு மாநிலத்தின் வளங்கள் பகிர்ந்தளிக்கப்படுவது
அவசியம் என்றார்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிக பங்களிப்பை வழங்கிய
சிலாங்கூருக்கு எனது வாழ்த்துகள். எனது தொகுதியில் அதிகமான
விவசாயிகள் உள்ளதால் அவர்களின் தேவைகள் நிறைவேற்றப்பட
வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பதாக உள்ளது என்றார் அவர்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிலாங்கூரின் பங்களிப்பு கடந்தாண்டு 25.9
விழுக்காடாக அதிகரித்துள்ளதாக மலேசிய புள்ளிவிபரத்து துறை நேற்று
முனதினம் கூறியிருந்தது. அதற்கு முந்தைய ஆண்டில் இந்த பங்களிப்பு
25.5 விழுக்காடாக இருந்தது.


