நிபோங் திபால், ஜூலை 5 - எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள சுங்கை
பாக்காப் இடைத் தேர்தலை முன்னிட்டு தாமான் டேசா, ஜாவியில் உள்ள
ஜாவி பல்நோக்கு மண்டபத்தைச் சுற்றியுள்ள சாலைகள் இன்று மாலை
5.00 மணி தொடங்கி வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணி வரை
போக்குவரத்துக்கு மூடப்படும்.
மூடப்படும் சாலைகளில் ஜாலான் செரிண்டிட், மாவட்ட போலீஸ்
தலைமயகத்திற்குச் செல்லும் துணைச் சாலை மற்றும்
பொதுப்பணித்துறை அலுவலகத்திற்குச் செல்லும் துணைச் சாலை
ஆகியவையும் அடங்கும் என்று செபெராங் பிறை செலாத்தான் மாவட்ட
போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் சோங் பூ கிம் கூறினார்.
பயணத்தை கவனமாக மேற்கொள்ளும் அதே வேளையில் போக்குவரத்து
நெரிசலைத் தவிர்ப்பதற்கு ஏதுவாக மூடப்படும் சாலைகள் குறித்த
விபரங்களை முன்கூட்டியே அறிந்து கொள்ளுமாறு பொதுமக்களை அவர்
கேட்டுக் கொண்டார்.
ஜாவி பல்நோக்கு மண்டபத்திற்கு வருவோர் போக்குவரத்துக்கு இடையூறு
மற்றும் நெரிசல் ஏற்படும் வகையில் தங்கள் வாகனங்களை தடை
செய்யப்பட்ட இடங்களில் குறிப்பாகக் குடியிருப்பு பகுதிகளில் நிறுத்த
வேண்டாம் என்றும் அவர் அறிக்கை ஒன்றில் வலியுறுத்தினார்.
வாக்களிப்பு தினத்தன்று வாக்குப் பதிவு நடவடிக்கைகள் சீராக
நடைபெறுவதை உறுதி செய்ய அமலாக்கத் தரப்பினர் வழங்கும்
அறிவுரைகளை பின்பற்றி நடக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.
நாளை நடைபெறும் சுங்கை பாக்காப் இடைத் தேர்தலில் பக்கத்தான்
ஹராப்பான் வேட்பாளர் ஜோஹாரி அரிபின் மற்றும் பெரிக்கத்தான்
நேஷனல் வேட்பாளர அபிடின் இஸ்மாயில் இடையே நேரடிப் போட்டி
நிலவுகிறது.


