கோலாலம்பூர், ஜூலை 4 - டீசல் மானியம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து கட்டுமானத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், குறிப்பாக கட்டுமானம் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றை பொதுப்பணித்துறை அமைச்சகம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
இதனால், தொழில்துறையில் பாதிப்பு ஏற்படலாம். இருப்பினும், தற்போது செலவு அதிகரிப்பின் அளவை மதிப்பிடு செய்வது மிகவும் குறுகியக் காலமாகக் கருதப்படுகிறது என அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார்.
“இந்தப் பிரச்சனையை அரசாங்கம் ஆய்வு செய்து வருகிறது. எந்தவொரு கொள்கையையும் பரிசீலிக்கும் அல்லது செயல்படுத்தும் முன், கட்டுமானச் செலவில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைக் கண்காணிக்கும் புள்ளியியல் துறையால் வழங்கப்பட்ட பொருள் செலவுக் குறியீட்டை பகுப்பாய்வு செய்வது உட்பட விரிவான ஆராய்ச்சி அவசியம், ”என்று அவர் இன்று மக்களவையில் அமைச்சர்களின் கேள்வி நேரத்தின் போது கூறினார்.
அதிகரித்து வரும் இயந்திரங்கள் மற்றும் பொருள் செலவுகளால் பாதிக்கப்பட்டுள்ள ஒப்பந்ததாரர்களுக்குக் குறிப்பாக டீசல் மானியம் அகற்றப்படுவதற்கு முன் வேலை வழங்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான அரசாங்க முயற்சிகள் பற்றி ரோஸ்லான் ஹாஷிமினின் (பிஎன்-கூலிம் பண்டார் பாரு) துணைக் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
G1 ஒப்பந்ததாரர்களின் பணி மதிப்பு வரம்பை RM200,000இலிருந்து RM250,000 அல்லது RM300,000 ஆக உயர்த்துவதற்கான திட்டம் குறித்த ரோஸ்லானின் கேள்விக்கு பதிலளித்த நந்தா, அதிகரித்து வரும் பொருட்களின் விலையைக் கருத்தில் கொண்டு, பணி மதிப்பு வரம்பில் சரிசெய்தல் நடவடிக்கையாவும் நிதி அமைச்சகத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்றார்.
- பெர்னாமா


